செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8c9a2206-04bb-40db-85ff-1f6668740995
-

புதுக்கிருமி காரணம்: தொற்று கூடியது; கடும் பாதிப்பு குறைவு

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை புதிதாக 11,732 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. திங்கட்கிழமையன்று உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,719 ஆகத்தான் இருந்தது.

கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக் கூடியதற்கு 'எக்ஸ்பிபி' என்ற புதிய உருமாறிய கிருமியே காரணம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

புதிய உருமாறிய கிருமி அவ்வளவாக கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்று தெரிகிறது.

சிங்கப்பூரில் எக்ஸ்பிபி உருமாறிய கிருமி காரணமாக மரணங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாகிவிட்டதாக வாட்ஸ்அப்பில் இடம்பெறக்கூடிய புரளிகளுக்கு எதிராக போஃப்மா சட்டத்தை அமைச்சு பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.

எக்ஸ்பிபி உருமாறிய கிருமி காரணமாக தொற்று அதிகரித்துள்ளது. ஆனால் ஒப்பிட்டுப் பார்க்கையில் கடும் பாதிப்பு குறைவாக இருக்கிறது.

தடுப்பூசி காரணமாக மக்களிடம் ஏற்பட்டு இருக்கும் நோய்த் தடுப்பு ஆற்றல் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்போரைப் பொறுத்தவரை, அவர்களில் பெரும்பாலாேனாருக்குக் கடும் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.

போதைப்பொருள்: சிங்கப்பூரின் நிலைக்கு தகுந்த காரணங்கள்

போதைப்பொருள் புழக்கம், கடத்தல் செயல்களைச் சிங்கப்பூர் மிகக் கடுமையாகக் கருதுகிறது.

இது ஏன் என்பதற்கு அண்மையில் தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் எடுத்துக்காட்டு என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். தாய்லாந்து மூன்று மாதங்களுக்கு முன் கஞ்சா புழக்கத்தை அனுமதித்தது. ஆனால் இப்போது அங்கு நிலைமை மாறிவிட்டது.

சிறார் பராமரிப்புப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு அந்த நாடு போதைப்பொருளுக்கு எதிரான பிடியை இறுக்குகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்தில் பன்யா கம்ராப், 34, என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி, இந்த மாதம் 6ஆம் தேதி கத்தி, துப்பாக்கியுடன் அந்தப் பள்ளியில் புகுந்து 22 சிறார்கள் உட்பட 38 பேரைக் கொன்றார். சம்பவத்தை அரங்கேற்றியபோது அந்த ஆடவருக்கு எதிராக போதைப் பொருள் குற்றச்சாட்டு ஒன்று விசாரிக்கப்பட்டு வந்தது.

போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான நிலையைக் குறை சொன்னவர்கள் தாய்லாந்து சம்பவத்தை அடுத்து வாயை மூடிக்கொண்டு விட்டார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

போதைப்பொருள் புழக்கம், கடத்தலுக்கு எதிராக சிங்கப்பூர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தகுந்த காரணங்கள் இருக்கின்றன என்று அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.