மலேசியாவில் இருந்து பிராய்லர் கோழிகள் இன்று பிற்பகலில் சிங்கப்பூர் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு வரம்புக்குட்பட்ட அளவில் வந்துவிடும் என்று கீ சோங் ஃபுட் என்ற கோழி இறக்குமதி நிறுவன தொழில் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் சிம் கூறினார்.
விலை ஏறக்குறைய 10% முதல் 16% வரை அதிகரித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், பேரங்காடிகள், ஈரச் சந்தைகள் போன்ற சில்லறை விற்பனைக் கடைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை காலையில்தான் மலேசியக் கோழி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இதர சில இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
ஷெங் சியோங் போன்ற பேரங்காடிகளும் இதை உறுதிப்படுத்தின.
மலேசியாவில் உற்பத்தி குறைந்த தாலும் விலை ஏற்றத்தாலும் சிங்கப்பூருக்கான கோழி ஏற்றுமதிக்கு கடந்த ஜூன் 1 முதல் மலேசியா தடை விதித்தது.
அந்தத் தடை, கடந்த செவ்வாய்க்கிழமை அகலும் என்று மலேசிய அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினர்.
அதையடுத்து மலேசியக் கோழி இறக்குமதியாகிறது.

