ஆரம்பக் கல்வித் துறையில் பட்டமும் முதுகலைப் பட்டமும் பயில்வதற்காக 12 பாலர் பருவக் கல்வியாளர்களுக்கு, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நேற்று உபகாரச் சம்பள விருது வழங்கியது. இந்த உபகாரச் சம்பளத்தின்வழி சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்திலும் தேசிய கல்விக் கழகத்திலும் இணைந்து படிக்கத் தேவையான நிதி வழங்கப்படும்.
தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 260க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பயிற்சி விருதும் வழங்கப்பட்டது. மாணவர்கள் தற்போது பயிலும் பாடங்களுக்கான கட்டணத்தை இந்த விருது ஈடுசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி விருதுகளை வழங்கினார்.
தரமான பாலர் கல்வித் துறையின் மையமாக கல்வியாளர்கள் உள்ளனர் என்று குறிப்பிட்ட திரு மசகோஸ், அரசாங்கம் தொடர்ந்து கல்வியாளர்களின் வளர்ச்சியையும் வாழ்க்கைத்தொழில் லட்சியங்களையும் ஆதரிக்கும் என்றார்.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு 2015ஆம் ஆண்டு முதல் $86 மில்லியன் மதிப்பில் 180 உபகாரச் சம்பள விருதுகளையும் 2,700 பயிற்சி விருதுகளையும் வழங்கியுள்ளது.
"உங்களது முயற்சிகளின்வழி நம் சமுதாயத்தின் அடித்தளமாக விளங்கும் குடும்பங்களுக்கு நீங்கள் ஆதரவாக இருக்கிறீர்கள். வசதிகுறைந்த பின்னணியுடைய பிள்ளைகள் உட்பட அனைத்து பிள்ளைகளுக்கும் பாலர் பருவக் கல்வியாளர்கள் பராமரிப்பும் கல்வியும் வழங்கும்போது, குடும்பங்கள் மேம்படுகின்றன.
"தங்களின் பிள்ளைகளுக்குச் சிறந்த பராமரிப்பு கிடைக்கும் உறுதியை வேலைக்குச் செல்லும் பெற்றோர் பெறுகின்றனர்," என்று விழாவுக்கு வந்திருந்த பாலர் பருவக் கல்வியாளர்களிடமும் மாணவர்களிடமும் திரு மசகோஸ் கூறினார். ஆரம்பக் கல்வியாளர்களிடத்தில் மேலும் பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்களுக்குக் கூடுதல் திறன்கள் உள்ளதாகவும் அரசாங்கம் அறிந்துள்ளது என்றார் அவர்.
"உங்களின் பங்களிப்புக்கும் நிபுணத்துவத் திறன்களுக்கும் ஈடுகொடுக்கும் அளவில் கல்வியாளர்களின் சம்பளங்கள் இருப்பதை உறுதிசெய்வதற்காக நாங்கள் மேலும் முயற்சி எடுப்போம்," என்று அவர் குறிப்பிட்டார்.
பாலர் பள்ளிக் கல்வியாளர்களின் சம்பளம் தற்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் மறுஆய்வு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.

