தன் தந்தையைக் கொலை செய்ததாக 19 வயது சைலஸ்நர் சியா ஜியே காய் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது. ஈசூன் அவென்யூ 4ல் உள்ள புளோக் 653ன் 4வது மற்றும் 5வது மாடிகளுக்கிடையே 47 வயது திரு எடி சியா வீ டெக் கொல்லப்பட்டதன் தொடர்பில் இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் காணொளி இணைப்பின்வழி தோன்றிய சியா, தலை குனிந்தபடி இருந்தார்.
விசாரணையில் உதவ, மத்திய காவல்துறைப் பிரிவில் சியாவைத் தடுத்துவைக்குமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இரண்டு நாள்களுக்கு அவ்வாறு தடுத்துவைப்பதற்கு மாவட்ட நீதிபதி டேரண்ஸ் டே ஒப்புதல் வழங்கினார். வழக்கறிஞர்கள் சுனில் சுதீசன், ஜாய்ஸ் கூ ஆகியோர் சியாவைப் பிரதிநிதிப்பர் என்று அறியப்படுகிறது. வழக்கு தொடர்பில் பேசுவதற்கும் அவருடைய கோரிக்கைகளுக்கு உதவுவதற்கும் தன் கட்சிக்காரரை எந்நேரமும் பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு திரு சுதீசன் விண்ணப்பித்துள்ளார்.
இல்லையேல், சியாவுக்குச் சட்டரீதியாக உள்ள உரிமைகளை அவரிடம் விளக்கத் தமக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பான தற்காப்புத் தரப்பு வாதம் இன்றைய வழக்கு விசாரணையில் தொடர்கிறது.
திரு எடி சியாவும் அவரின் மனைவியும் சொத்துச்சந்தை விற்பனை மற்றும் வாடகை தொடர்பில் வர்த்தகப் பங்காளிகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இருவருக்கும் 1994ஆம் ஆண்டில் திருமணமானதாகவும் அவர்களுக்கு ஒரு மகளும் இரு மகன்களும் இருப்பதாகவும் அறியப்படுகிறது. ஐந்தாவது மாடியில் அவர்களின் வீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட சியா, தம்பதியின் ஆக இளைய பிள்ளை என்று நம்பப்படுகிறது.
சம்பவம் நடந்த மறுநாள் அங்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்று விசாரித்ததில் அண்டைவீட்டார் இன்னமும் அதிர்ச்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திரு எடி சியா சரிந்து தரையில் விழுவதற்குமுன் அவரின் முகமும் ஆடைகளும் ரத்த வெள்ளத்தில் நனைந்திருப்பதைப் பார்த்ததாகக் குடியிருப்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.
உதவி தேவை எனத் திங்கட்கிழமை இரவு 7.05 மணிக்குத் தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது ஒரு வீட்டின் வெளியே திரு எடி சியா பேச்சு மூச்சின்றிக் கிடந்ததாகக் கூறப்பட்டது. அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிசெய்ததை அடுத்து சைலஸ்நர் உடனே கைதும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

