அஞ்சலகத்திற்குச் சென்று பொட்டலம் அனுப்புவதில் இனி சிரமம் இருக்காது. வரும் ஜனவரி மாதத்திற்குள் எம்ஆர்டி நிலையங்களில் 'பாப்ஸ்டாப்' என்ற வசதியை 'சிங்போஸ்ட்' ஏற்படுத்திக் கொடுப்பதன்வழி மக்கள் எளிதில் பொட்டலங்களை அனுப்பி வைக்கலாம்.
அஞ்சல்தலை விற்பனை, கட்டணங்கள் செலுத்துதல், கைபேசி அட்டையில் பணம் நிரப்புதல் போன்ற சேவைகளையும் அஞ்சலகங்கள் வழங்குவதால் புதிய வசதிவழி பயனீட்டாளர்கள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்று 'சிங்போஸ்ட்' தலைமை நிர்வாகி திருவாட்டி தியோ சு யின் கூறினார். இதற்கிடையே, மத்திய வர்த்தக வட்டார எம்ஆர்டி நிலையம் ஒன்றில் முதல் 'பாப்ஸ்டாப்' அமைந்திருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்துவந்தது.
'பாப்ஸ்டாப்' அமைந்திருக்கும் இடங்களில் 'சிங்போஸ்ட்' பணியாளர்கள் அமர்த்தப்படுவர் என்றும் பொட்டலமிடுவதற்கான பொருள்களும் அவ்விடங்களில் கிடைக்கும் என்றும் அறியப்படுகிறது.
இதே சேவை மையங்களிலிருந்து பயனீட்டாளர்கள் பொட்டலங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் எதிர்காலத்தில் சாத்தியமாவது குறித்து 'சிங்போஸ்ட்' ஆராய்ந்து வருகிறது.
'பாப்டிராப்' என்ற வசதியும் இவ்விடங்களில் இருக்கும். தானியங்கி இயந்திரவழி எந்நேரத்திலும் பொட்டலங்களைப் போடலாம்.
அனுப்புநரும் பெறுநரும் 'சிங்போஸ்ட்' கைபேசி செயலிவழி பொட்டலம் இருக்குமிடத்தின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

