ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை ஆராயும் வகையில் வெவ்வேறு விவகாரங்களை எடுத்துச்சொல்லும் நூலாக 'ஆசியான் அண்ட் இந்தியா: த வே ஃபார்வர்ட்' (ASEAN and India: The Way Forward) நேற்று முன்தினம் தேசிய நூலகத்தில் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரின் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் நூலை வெளியிட்டார். 300 பக்கங்களுடைய இந்த நூலை பேராசிரியர் டோமி கோ, திரு ஹெர்நாயக் சிங், திருவாட்டி மோ துஸார் ஆகியோர் இணை ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளனர்.
நூலில் மொத்தம் 42 இந்தியர்களும் தென்கிழக்காசியர்களும் தங்களின் கண்ணோட்டத்தில் ஆசியான், இந்தியா தொடர்பான விவகாரங்களைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு உறவை மேலும் எவ்வாறு உயர்த்தலாம் என்பதற்கான வழிகளை ஆராய்வதற்கு இந்த நூல் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான், இந்தியா உறவுகள் கடந்த பல நூற்றாண்டுகளில் அடைந்துள்ள மாற்றத்தில் தொடங்கி இருதரப்பும் ஒன்றிணையும் அம்சங்கள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பின்னர், எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் அம்சங்களையும் நூல் ஆராய்கிறது.

