புகைபிடிக்கும் பழக்கத்தை நியூசிலாந்தில் இருக்கும் ஒருவர் கைவிடுவதற்குக் கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டும் போதாது. சமூகத்தினரையும் ஈடுபடுத்தி சிகரெட் புகையற்ற ஓர் எதிர்காலம் அவர்களுக்காக காத்திருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்று நியூசிலாந்து சுகாதாரத் துணை அமைச்சர் அயிஷா வெர்ரால் கூறினார்.
புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமையன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹாக் பொது சுகாதாரக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது அதில் அவர் இவ்வாறு கூறினார். நியூசிலாந்து 2025ஆம் ஆண்டுக்குள் சிகரெட் புகையற்ற ஒரு நாடாக மாறும் இலக்கைக் கொண்டுள்ளது.
தற்போது அங்கு புகைபிடிக்கும் 9 விழுக்காட்டினரை, 5 விழுக்காட்டினராகக் குறைக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, நியூசிலாந்து இளையரிடையே புகைபிடிக்கும் பழக்கம் கணிசமான அளவு குறைந்திருந்தாலும் 'வேப்பிங்' எனப்படும் மின்சிகரெட் பழக்கம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகக் கூறப்பட்டது.
நியூசிலாந்து இளையர்களில் 10 முதல் 20 விழுக்காட்டினர் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தாங்கள் அறிந்துள்ளதாகவும் அதன் தொடர்பில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டியுள்ளதாகவும்," டாக்டர் வெர்ரால் கூறினார். இருப்பினும், அதைத் தடை செய்யமாட்டோம் என்றார் அவர்.
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதும் விற்பனை செய்வதும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
இளையரிடையே காணப்படும் 'வேப்பிங்' பழக்கத்தைச் சமாளிக்க, சட்டங்கள், அமலாக்கம், பொதுக் கல்வி, மனநல ஆலோசனை ஆகியவற்றை உள்ளடக்கிய பல்முனை அணுகுமுறையை சிங்கப்பூர் கையாண்டு வருகிறது.

