வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸை ஜெனிவாவில் நேற்று சந்தித்து, உலகளாவிய சுகாதார விவகாரங்கள் பற்றி ஆழ்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளளார். வெளியுறவு அமைச்சு இதைத் தெரிவித்தது.
கிருமித்தொற்றுக்கு எதிரான உலகளாவியக் கண்காணிப்பு, வெளிப்படைத்தன்மை அதிகரித்தல், தவறான தகவல்களை எதிர்கொள்ளுதல், எதிர்காலப் பெருந்தொற்றுகளுக்கு ஆயத்தமாய் இருத்தல் ஆகியவை முக்கியம் என்று அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
கொவிட்-19 பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதத்தை டாக்டர் விவியன் பாராட்டினார்.
மாறிவரும் சுகாதாரச் சூழலில் அமைப்புக்கு சிங்கப்பூரின் முழு ஆதரவை அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கடுமையாகப் பரிசோதித்தல், கிருமியின் மரபணுக் கூறுகளை வரிசைப்படுத்துதல் உள்ளிட்டவற்றைச் செய்து, சிங்கப்பூர் அதன் உள்ளூர் கிருமித்தொற்று நிலவரத்தைச் சுறுசுறுப்புடன் கையாள்வதை டாக்டர் டெட்ரோஸ் ஏற்றுக்கொண்டார்.
டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஜெனிவா அறிவியல் அரசதந்திர முன்னோக்கு மாநாட்டில் கலந்துகொள்ள நேற்றுமுன்தினம் அங்கு சென்றார். இன்று அவர் நாடு திரும்புவார்.

