சிங்கப்பூர் டிஸ்லெக்சியா சங்கம், ஈசூனில் $300,000 செலவில் அதன் புதிய கற்றல் நிலையத்தைத் திறந்துள்ளது.
சங்கம் ஈசூனில் முன்பு நடத்தி வந்த நிலையத்தில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பிய சில பெற்றோர் சிரமங்களை எதிர்நோக்கினர். சிலர் தங்கள் பிள்ளை சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு இரண்டிலிருந்து நான்கு மாதங்கள் வரை காத்திருந்தனர். சிலர் வேறு நிலையங்களுக்கு அனுப்பி விடப்பட்டனர்.
தற்போது அப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக புதிய நிலையம் அமையும் என்று சங்கத்தின் தலைமை நிர்வாகி லீ சியாங் நேற்று அதன் திறப்புவிழாவில் கூறினார். புதிய நிலையம் ஈசூன் அவென்யூ ஐந்து புளோக் 741ல் அமைந்துள்ளது. அதில் எட்டு வகுப்பறைகளும் கற்றல் குறைபாடுள்ள சிறுவர்களுக்குத் தேவையான, குறைந்த விளக்கு வெளிச்சம் போன்ற வசதிகளும் உள்ளன. புதிய நிலையம் மார்ச் மாதத்தில் செயல்படத் தொடங்கியதிலிருந்து மாணவர் சேர்க்கை 17 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் டிஸ்லெக்சியா சங்கம் கற்றல் குறைபாடுள்ளவர் களுக்காக தீவுமுழுவதும் 13 நிலையங்களை நடத்தி வருகிறது.

