ஆ. விஷ்ணு வர்தினி
நிலையற்ற காலகட்டத்தை எதிர்நோக்கியுள்ள சிங்கப்பூர் உலகில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சிக்கல்களுக்கு எதிராக கூடுமானவரை தயாராக வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் கூறியுள்ளார்.
கிரேண்ட் கார்ப்தோர்ன் வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற தற்காப்பு அமைச்சின் இவ்வாண்டுக்கான தொண்டூழியர் பாராட்டு விழாவில் அமைச்சர் பேசினார்.
ஐரோப்பா-ரஷ்யா, அமெரிக்கா-சீனா ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கைக் குலைவை குறிப்பிட்ட டாக்டர் இங், சிங்கப்பூரர்களிடையே நிலவும் நம்பிக்கையே நம் தற்காப்புக்கான முக்கிய வளமாய் உள்ளதாகக் கூறினார்.
நோய்ப்பரவல் காரணத்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டூழியர் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
அதில் 315 தொண்டூழியர் களுக்கு நன்றி தெரிவித்ததோடு, 96 தொண்டூழியர்களுக்கு நியமன, மறு-நியமன சான்றிதழ்களை அளித்தார் டாக்டர் இங்.
தாக்குதல்களின்போது எல்லா உறுப்பினர்களுக்கும் உதவி கிட்டும் என உறுதியளிக்கும் நேட்டோவின் ஒப்பந்தத்தை குறித்து பேசிய அமைச்சர், "நமது வாழ் நாளில் நேட்டோ அதன் ஐந்தாம் பிரிவை அமல்படுத்தப்படும் வாய்ப்பு கட்டாயம் உள்ளது," என்றார்.
பனிப்போரின் முடிவுக்குப் பிறகு தற்போது அமெரிக்க-சீன உறவுகள் ஆக மோசமாக இருக்கும் நிலையில், அவை மேலும் மோசமடையுமானால் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியான் நாடுகள் ஏதாவது ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பமாட்டா.
ஆனால், 5ஜி, வர்த்தகம், பாதுகாப்பு குறித்த விவகாரங்கள் பாதிக்கப்படும்போது ஒரு நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது கடினமாக இருக்கும் என்று டாக்டர் இங் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழ் நிலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ராணுவமயமாகும் போக்கு அதிகரிக்கும் என்று அவர் சுட்டினார்.
"ராணுவச் செலவினம் உயரும். தாக்குதல்களைத் தடுக்கத் தேவையான நம்பிக்கை இல்லாமல், நேரடி மோதல்களுக்கான வாய்ப்புகள் கூடும்," என்று அவர் கூறினார்.
உக்ரேன் போரை மேற்கோள் காட்டிய அவர், "போர் அழிவுகளை உண்டாக்கும். எச்சூழ்நிலையிலும் அதில் சிக்கிவிடக்கூடாது. ஆனால், சச்சரவுகள் ஏற்பட்டால், நமது மக்களிடையே உள்ள ஒற்றுமையே நமது நாடு மீள்வதை நிர்ணயிக்கும்," என்றும் சொன்னார்.
தேசிய சேவை தொடங்கிய 55ஆவது நினைவாண்டை சிங்கப்பூர் இவ்வாண்டு கொண்டாடும் வேளையில், பெரும்பாலான சிங்கப்பூரர்கள் தேசிய சேவைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தற்காப்பு அமைச்சின் கருத்தாய்வுகள் தொடர்ந்து காட்டி வருகின்றன.
கடந்த ஆண்டு ஆய்வில் கலந்து கொண்ட சிங்கப்பூரர்களில் 96 விழுக்காட்டினர், தேசிய சேவை நாட்டின் தற்காப்புக்கும் பாதுகாக்க அவசியம் என்று மறுஉறுதிப்படுத்தியதை அமைச்சர் சுட்டினார்.
தற்காப்பு அமைச்சு, ஆயுதப் படையின் ஊழியர்களும் தொண்டூழியர்களும், கிருமித்தொற்றின்போது பல வகைகளில் உதவினர். அத்தியாவசியப் பொருள்களை பொட்டலமிடுதல், கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புகொண்டவர் களைக் கண்டறிதல், நோய் கண்டறியும் சாதனங்களைத் தயாரித்தல், சமூகப் பராமரிப்பு நிலையங்களையும் முகக்கவசம் விநியோகிக்கும் நிலையங்களையும் வழிநடத்துதல் முதலியவற்றில் அவர்கள் பங்களித்ததாக டாக்டர் இங் கூறினார்.
அது தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நீடித்த நிலைத்தன்மையையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு ஆயுதப்படையும் தற்காப்பு அமைச்சும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் கூறினார்.
இத்தகைய கடமையுணர்வு உள்ள தேசிய சேவையாளர்களையும் ஆயுதப்படை, தற்காப்பு அமைச்சு ஆகியவற்றின் தொண்டூழியர்களையும் காணும்போது, சிங்கப்பூர் சிக்கல்களை கையாண்டு வெல்லும் என்ற நம்பிக்கை ஏற் படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

