சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் (எஸ்ஐடி) இவ்வாண்டு பட்டம் பெறும் மூன்றில் இரண்டு பட்டதாரிகள் பட்டம் பெறும் முன்னரே முழுநேர வேலையில் சேர்ந்துவிட்டனர். மருந்தியல் பொறியியல், தகவல்தொடர்புத் தொழில்நுட்பம், சுகாதாரத் துணைச் சேவைகள், கட்டுமான உள்ளமைப்பு போன்ற சில குறிப்பிட்ட துறைகளில் பட்டம் பெற்ற பத்தில் ஒன்பது பேருக்கு பட்டம் பெறும் முன்னரே, முழுநேர வேலை கிடைத்துவிட்டது.
எஸ்ஐடியின் நேற்றைய பட்டமளிப்பு நிகழ்ச்சியில் அதன் தலைவர் சுவா கீ சாய்ங் இதைத் தெரிவித்தார். கழகம் இவ்வாண்டு பட்டம் பெறும் தன் மாணவர்களில் சுமார் 1,700 பேரிடம் நடத்திய கருத்தாய்வில் அத்தகவல்கள் தெரிய வந்ததாக அவர் கூறினார்.
நேற்று நடந்த இரண்டு பட்ட மளிப்பு நிகழ்ச்சிகளில், கதிர்வீச்சு சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை ஆகிய இரண்டு துறைகளையும் சேர்ந்த 380 பேர் பட்டம் பெற்றனர்.
எஸ்ஐடியில் இவ்வாண்டு 47 இளநிலை, முதுநிலை பட்டக்கல்வித் துறைகளைச் சேர்ந்த 2,200க்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இது கழகத்தில் பட்டம் பெறும் ஆகப் பெரிய எண்ணிக்கை ஆகும்.
இவ்வாண்டு பட்டமளிப்பு விழாவில் எஸ்ஐடி அதன் முதல் கௌரவ முனைவர் பட்டத்தை அதன் அறங்காவலர் குழு உறுப்பினரான திரு இங் யாட் சங்குக்கு வழங்கியது.
செயல்முறைக் கல்வி சார்ந்த சிங்கப்பூரின் முதல் பல்கலைக்கழகமாக எஸ்ஐடியை வளர்த்தெடுத்ததில் அவர் ஆற்றிய பங்குக்காக அப்பட்டம் அளிக்கப்பட்டது.
நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சுகாதார துணை நிபுணர்கள் வளர்ந்துவரும் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் குறிப்பாக சிங்கப்பூரின் மூப்படையும் மக்களுக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றுவர் என்றார்.
"வேலைவாய்ப்புடன், வாழ்க்கைத் தொழிலில் தொடர்ச்சியான வளர்ச்சி, உருமாற்றம், கற்றல் ஆகியவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம். உதாரணத்துக்கு, கதிர்வீச்சு துறையில் நோயைக் கண்டறிதல் சிகிச்சை ஆகியவற்றில் தொழில்நுட்ப மேம்பாட்டால் புரட்சி ஏற்படக் கூடும்," என்றார் திரு வோங். அதே நேரத்தில் வேலை முழுவதும் புதிய திறன்களையும் புதிய செயல் முறைகளையும் அவர்கள் கற்பது அவசியம் என்று அவர் கூறினார்.