வருமான தகுதி வரம்பு உயரும்; மொத்தம் 135,500 மாணவர்கள் பலனடைவர்
பள்ளிக்கூடங்களில் கல்வி கற்க ஆகும் செலவை ஈடுசெய்ய உதவியாக நிதி ஆதரவு பெற மேலும் சுமார் 10,500 மாணவர்கள் தகுதி பெறுவார்கள். இதற்குத் தோதாக நிதியுதவி திட்டங்களுக்கான வருமான தகுதி வரம்பை கல்வி அமைச்சு அதிகரிக்கிறது.
குடும்ப மொத்த மாத வருமான வரம்பு இப்போது $2,750 ஆக இருக்கிறது. இது $3,000 ஆக உயர்த்தப்படும். தனிநபர் வருமான வரம்பு $690லிருந்து $750க்கு கூடும்.
இந்த ஏற்பாடு வரும் ஜனவரி மாதத்திலிருந்து தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, புகுமுக வகுப்பு மாணவர்களுக்குப் பொருந்தும். சிறப்புக் கல்விப் பள்ளிகள், சுயேச்சைப் பள்ளி மாணவர்களும் பலனடையலாம்.
பலதுறை தொழில்நுட்பக் கல்லூரி போன்ற உயர்நிலைக்குப் பிந்திய கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களைப் பொறுத்தவரை, குடும்ப வருமான வரம்பு மாற்றம் 2023 கல்வி ஆண்டில் இருந்து தொடங்கும்.
இந்தப் புதிய ஏற்பாடு காரணமாக நிதியுதவி பெறக்கூடிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 135,500 ஆகும் என்று நேற்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது. அதைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் நேற்று புதிய $1.5 பில்லியன் ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், செய்தியாளர் மாநாட்டில் அந்தத் திட்டம் பற்றி அறிவித்தார். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் மாணவர்கள் பலனடையக்கூடிய திட்டம் இடம்பெற்றது.
தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் 2023 கல்வி ஆண்டில் இருந்து அரசாங்க கல்வி உதவித் தொகை மூலம் மேலும் ஆதரவைப் பெறுவார்கள்.
குறைந்த வருமான குடும்பத்தினருக்கு அதிக உதவி கிடைக்கும். குடும்ப மாத வருமானம் $3,000 ஆக அல்லது அதற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த முழுநேர தொழில்நுட்பக் கல்விக் கழக மற்றும் உயர்நிலை நைடெக் மாணவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கல்விக் கட்டணம் முற்றிலும் ஈடுசெய்யப்படும்.
இப்போது அவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித் தொகை $1,500 ஆக இருக்கிறது. இது $1,600ஆக உயரும்.
பட்டயப் படிப்பு, இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஏற்பாடுகளைத் தான் மறுபரிசீலனை செய்து வருவதாக அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
இதனிடையே, இந்தப் புதிய மாற்றங்கள் பற்றி நேற்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சான் சுன் சிங், மாணவர்களின் பின்னணி எப்படி இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக எப்போதுமே கல்வி இருந்து வரவேண்டும் என்று கூறினார்.
இவ்வேளையில், எடுசேவ் தகுதிக் கல்வி உதவித்தொகைக்குத் தகுதி பெறும் வருமான வரம்பை $6,900லிருந்து $7,500 ஆக உயர்த்துவது பற்றி தான் மறுபரிசீலனை செய்யப்போவதாக அமைச்சு தெரிவித்து இருக்கிறது. இது 2023ஆம் ஆண்டிலிருந்து நடப்புக்கு வரும்.
கல்வி அமைச்சு, 2023 கல்வி ஆண்டில் இருந்து தகுதி அடிப்படையிலான தொழில்நுட்பக் கல்விக்கழக ரொக்க கல்வி உபகாரச் சம்பளத்தை $1,600லிருந்து $1,800க்கு உயர்த்தும்.

