சிங்கப்பூரில் விரைவில் ஜிஎஸ்டி வரி உயர்வு இடம்பெறவிருக்கிறது. அந்த உயர்வு காரணமாக ஏற்படக்கூடிய தாக்கத்தை ஈடுசெய்ய $6.6 பில்லியன் ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்போது பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு அந்த ஆதரவுத் திட்டம் அதற்கேற்ப மேம்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று அறிவித்தார்.
விவரங்கள் 2023 வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெறும் என்று நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கும் செலவினங்களை ஈடுசெய்யும் ஒரு பகுதியாக ஜிஎஸ்டி வரி உயர்வு இரண்டு கட்டங்களாக இடம்பெறுகிறது. வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 1% கூடி ஜிஎஸ்டி 8% ஆக இருக்கும். பிறகு 2024 ஜனவரி 1 முதல் 1%கூடி 9% ஆகும்.
ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஏற்படக்கூடிய தாக்கத்தை ஈடுசெய்ய அரசாங்கம் முற்றிலும் கடப்பாடு கொண்டு இருக்கிறது என்று திரு வோங் நேற்று உறுதிபட தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி உயர்வு தாக்கத்தை ஈடுசெய்ய இடம்பெறக்கூடிய உத்தரவாதத் திட்டம் பெரும்பாலான சிங்கப்பூரர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு கைகொடுக்கும்.
குறைந்த வருமான குடும்பங்களைப் பொறுத்தவரை அந்த உதவித் திட்டம் 10 ஆண்டுகளுக்கு உதவும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
வயது வந்த சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் ரொக்கப் பட்டுவாடா, குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு ரொக்க பட்டுவாடா, ஏறத்தாழ 950,000 சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதலாக ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு பயனீட்டுச் செலவு தள்ளு படிகள் எல்லாம் அந்த உத்தரவாதத் திட்டத்தில் உள்ளடங்கும்.
அரசாங்கம் தன்னுடைய கடப்பாட்டை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு ஏதுவாக அந்தத் திட்டத்தின் அளவு, அங்கங்கள் எல்லாம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று திரு வோங் கூறினார்.
பணவீக்கம் கூடும் ஒரு நேரத்தில் ஜிஎஸ்டியும் கூடுகிறது. இதனால் மக்கள் கவலைப்படுகிறார்கள். தான் இதைப் புரிந்துகொள்வதாகத் தெரிவித்த திரு வோங், பணவீக்கம் மட்டுப்படும்போது ஜிஎஸ்டி வரியை உயர்த்தலாம் என மக்கள் விரும்பக்கூடும் என்றார்.
ஆனால், அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி குறைந்தாலும் கடந்த 10 ஆண்டு காலமாக சிங்கப்பூரில் நிலவி வந்த மிகக் குறைந்த அளவுக்கு அது இறங்காது என்றே தெரிகிறது.
எதிர்கால பணவீக்க நிலை மிகவும் நிச்சயமில்லாமல் இருந்து வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டில் பணவீக்கம் குறைந்தாலும் அப்போதும் நிச்சயமில்லாத நிலவரம் இருக்கவே செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
உக்ரேன்-ரஷ்யா போர் மேலும் நீடிக்கக்கூடும். அல்லது உணவு, எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் புதிய பிரச்சினைகள் ஏற்படலாம். இவற்றின் விளைவாக மேலும் அதிக காலத்திற்கு அதிக பணவீக்கம் இடம்பெறக்கூடிய வாய்ப்பு உண்டு என்றார் அவர்.

