பணவீக்க பாதிப்பை ஈடுகட்ட அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய ஆதரவுத் திட்டத்தில் நிறுவனங்களுக்கு என்று புதிதாக உதவித் திட்டம் எதுவும் இடம்பெறவில்லை.
நிறுவனங்கள் எரிசக்தியை மேலும் சிக்கனப்படுத்தும் அள விற்கு மாறிக்கொள்ள இந்த ஆண்டு அவற்றுக்கு ஏற்கெனவே உதவிகள் கிடைத்து இருக்கின்றன. இதுவே நிறுவனங்களுக்கு புதிய ஆதரவுத் திட்டங்கள் இடம்பெறாததற்கான காரணம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் விளக்கினார்.
புதிய திட்டத்தில் நிறுவனங்களுக்குப் புதிய உதவிகள் அறிவிக்கப்படாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த நிதி அமைச்சருமான திரு வோங், நிறுவனங்களைப் பொறுத்தவரை சீரமைப்புகள் இப்போது மிக முக்கியமானவையாக இருக்கின்றன என்று தெரிவித்தார்.
நிறுவனங்களின் சீரமைப்பும் உருமாற்றமும் அரசாங்கத்தின் ஒருமித்த கவனமாக இருந்து வந்திருக்கின்றன.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் சில உதவித் திட்டங்களை அறிவித்தது.
நிறுவனங்களுக்கு உதவ ஏற்கெனவே பல திட்டங்களும் நடப்பில் உள்ளன.
வரும் வரவுசெலவுத் திட்டத்தில் நிறுவனங்களுக்கு இதர உதவித் திட்டங்களை இடம்பெறச் செய்ய முடியுமா என்பது பற்றி ஆராயப்படும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.

