சிங்கப்பூரில் எக்ஸ்பிபி உருமாறிய கிருமி அலை தலைதூக்குகிறது. கொவிட்-19 கிருமியுடன் வாழவேண்டிய சூழ்நிலையில் சிங்கப்பூர் இருக்கிறது.
இந்த நிலையில், சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நான்கு மிக முக்கிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசியைத் தொடர்ச்சியாகப் போட்டுக்கொண்டு வாருங்கள். 50 வயதைக் கடந்தவர்கள் மூன்று தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் அல்லது கடைசி ஊசியைப் போட்டுக்கொண்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆனவர்கள், மொடர்னாவின் ஸ்பைக்வேக்ஸ் இரு ஆற்றல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
தேவைப்படும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் கிருமி தொற்றினாலும் கடும் பாதிப்பு இருக்காது என்றார் அவர்.
சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டிய வாய்ப்பு இருக்கும் என்பதை இரண்டாவது வழிகாட்டி நெறிமுறையாக அவர் அறிவித்தார்.
கொவிட்-19 சூழ்நிலை மோசமடைந்தால் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி அடிப்படையிலான வேறுபாட்டு நடைமுறைகளை அமல்படுத்துவது போன்றவற்றுக்குத் தேவை ஏற்படக்கூடும் என்று அமைச்சர் கூறினார்.
கொரோனா அலை தலைதூக்கும்போது மருத்துவமனைகளுக்குச் செல்லும் வருகையாளர்களைக் கட்டுப்படுத்துவது மூன்றாவது நெறிமுறை.
நான்காவதாக ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்; உடல்நிலை சரியில்லை என்றால், முதியோரோடு வசித்து வந்தால் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்;
உடல்நிலை சரியில்லை என்றால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்; தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்;
கொரோனா கிருமி தொற்றினால் தேவையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

