சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றம் வெள்ளிக்கிழமை நடந்த விருந்தில் $550,000 திரட்டியது.
வாகன ஓட்டுநர்களுக்கும் பாதசாரிகளுக்கும் சாலைகளைப் பாது காப்பாக ஆக்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக அந்தத் தொகை திரட்டப்பட்டது.
இந்த ஆண்டில் முதல் பாதியில் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளன. இந்தச் சூழலில் மன்றம் சாலைப் பாதுகாப்புக்கு நிதி திரட்டி இருக்கிறது.
உள்துறை அமைச்சு அமைத்துள்ள அறப்பணி அமைப்பான அந்த மன்றம், சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மாதம், போதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான இயக்கம் போன்ற செயல்திட்டங்களை நிர்வகித்து நடத்துகிறது.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஃபைசல் இப்ராஹிம் மன்றத்தின் விருந்தில் கலந்துகொண்டார். இந்த ஆண்டின் முதல் பாதியில் உயிர் பலி சாலை விபத்துகள் குறைந்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரைப்பட்ட காலத்தில் 44 சாலை விபத்துகளில் சிக்கி 45 பேர் கொல்லப்பட்டனர். 2021 முதல் பாதியில் நிகழ்ந்த 52 விபத்துகளில் 58 பேர் மாண்டனர் என்று அவர் கூறினார்.
ஆனால், சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் விபத்துகளின் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இணைப் பேராசிரியர் ஃபைசல் தனது உரையில் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அளவுக்கு அதிக வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதால் நிகழ்ந்த விபத்துகள், குடித்துவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று கைதானவர்களின் எண்ணிக்கை கூடி இருப்பதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் நிகழ்ந்த 3,159 சாலை விபத்துகள் காயம் ஏற்படுத்திய அல்லது உயிரை பலிவாங்கிய விபத்துகளாக இருந்தன. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இதேபோன்ற 3,012 விபத்துகள் நிகழ்ந்தன.
அதே காலகட்டத்தில் வேகக்கட்டுப்பாட்டை மீறிய சம்பவங்கள் 66,480லிருந்து 69,291 ஆகின. வேகமாக வாகனத்தை ஓட்டிச்சென்றதால் நிகழ்ந்த விபத்துகள் 474 லிருந்து 487 ஆகக் கூடின.

