சிங்கப்பூரில் இப்போது தலைகாட்டும் கொவிட்-19 எக்ஸ்பிபி என்ற உருமாறிய கிருமி காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைவாக இருக்கக்கூடும்.
என்றாலும்கூட தொற்று பாதிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள், அலட்சியமாக இல்லாமல் இரண்டாவது பூஸ்டர் ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்றுக் கூறினார்.
50 வயதும் அதற்கும் அதிக வயதுள்ள மக்களுக்கு இரு வகை ஆற்றலைக் கொண்ட மொடர்னா தடுப்பூசியை சிங்கப்பூர் போடத் தொடங்கி இருக்கிறது. இந்தத் தடுப்பூசி இரண்டாவது பூஸ்டர் ஊசியாகப் போடப்படுகிறது.
கடைசி ஊசியைக் குறைந்தபட்சம் ஐந்து மாதங்களுக்கு முன் போட்டுக்கொண்டவர்கள் இப்போது 2வது பூஸ்டர் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம்.
இரண்டு ஆற்றல்களைக் கொண்ட மொடர்னா தடுப்பூசி, முதன்முதலாக தலைகாட்டிய கொவிட்-19 கிருமியையும் பிஏ.1/2 உருமாறிய கிருமிகளையும் இப்போது தலைகாட்டும் எக்ஸ்பிபி கிருமியையும் எதிர்த்து போராடி அவற்றை அழித்து உடலுக்குப் பாதுகாப்பைத் தருவதில் அதிக ஆற்றலுடன் திகழ்கிறது.
இந்த ஊசி மூலம் கிடைக்கக்கூடிய பாதுகாப்பு வலுமிக்கதாக இருக்கிறது என்று சிங்கப்பூர் மருத்துவ சேவைத் துறைத் தலைவர் கென்னத் மாக் தெரிவித்தார்.
இரண்டு ஆற்றல்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி, உருமாறிய அனைத்து வகை கிருமிகளுக்கும் எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது என்று அவர் விளக்கம் அளித்தார்.
கொவிட்-19 மறுபடியும் தலைதூக்குவதன் தொடர்பில் நேற்று செய்தியாளர் கூட்டம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் திரு ஓங், இப்போது தலைகாட்டும் அலை அடுத்த மாதம் நடுப்பகுதியில் உச்சத்தைத் தொடும். அன்றாடம் 15,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு முதல் மூன்று முதல் நான்கு மாதங்களில் தொற்றுக்கு எதிராக உடலில் நல்ல பாதுகாப்பு இருக்கும். பிறகு 10 மாதம் வரை ஓரளவுக்குப் பாதுகாப்பு இருக்கும்.
தடுப்பூசி மூலம் உடலில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு ஆற்றல் எப்போதுமே நிலையாக இருந்து வராது.
என்றாலும் கடுமையானப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பூசி மருந்து தடுக்கும் என்று அவர் விளக்கினார்.
இரு வகை ஆற்றல்களைக் கொண்ட தடுப்பூசியைத் தகுதிபெறும் பொதுமக்கள் இப்போது ஒன்பது கூட்டுப் பரிசோதனை தடுப்பூசி நிலையங்களில் போட்டுக்கொள்ளலாம்.

