மானிய விலையில் 2002ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் 'மேமோகிராம்' பரிசோதனைகள் செய்யப்பட்டதில் சுமார் 370,000 மாதர் பயனடைந்துள்ளனர். அத்துடன் 4,800க்கும் மேற்பட்டோருக்குப் புற்றுநோய் இருப்பதும் கண்டறியப்பட்டது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் 'வாழ்நாள் பரிசோதனை' திட்டம் குறித்து மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் இத்தகவல்களைத் தெரிவித்தார். மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தோர் 90 விழுக்காட்டினர் என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
'மேமோகிராம்' பரிசோதனைகளுக்கு 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாதர், ஈராண்டுக்கு ஒருமுறை செல்வது முக்கியம் என்று கூறப்பட்டது.
ஐந்தாண்டுகளில் மார்பகப் புற்றுநோய் சம்பவங்கள் ஏறத்தாழ மூன்றரை மடங்கு அதிகரித்துவிட்டதாக 2019ன் சிங்கப்பூர் புற்றுநோய் பதிவக அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட வயதுடைய சிலர், $5 அல்லது அதற்கும் குறைவாக மானிய விலையில் 'வாழ்நாள் பரிசோதனை' திட்டத்திற்குத் தகுதிபெறலாம்.
மாதர் சுகாதாரக் குழு, சிங்கப்பூர் 'ஆஸ்டியோபொரோசிஸ்' சங்கம் மற்றும் மக்கள் கழக மாதர் ஒருங்கிணைப்புக் கட்டமைப்பு மன்றத்துடன் இணைந்து 'ஆரோக்கிய மாதர், ஆரோக்கிய குடும்பங்கள்' திருவிழாவை நேற்று 'ஒன் பொங்கோல்' பகுதியில் தொடங்கி வைத்தது. மாதர் தொடர்பான முக்கியச் சுகாதாரப் பிரச்சினைகளுக்குக் குழு தீர்வு காண முனையும்.
மாதரிடையே அதிகம் கண்டறியப்படும் மற்றொரு புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாகும் என்று குழுத் தலைவராகவும் உள்ள திருவாட்டி ரஹாயு குறிப்பிட்டார். இக்குறிப்பிட்ட புற்றுநோய்க்கான பரிசோதனைகள் குறைந்த எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் தெரிவித்திருந்தது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மாதர் சுகாதாரத்தின் இன்னொரு முக்கிய அம்சமாகும் என்ற திருவாட்டி ரஹாயு, ஆண்களைக் காட்டிலும் இடுப்பு எலும்பு முறிவுகளாலும் எலும்புப்புரையாலும் பாதிக்கப்படும் அபாயம் மாதருக்கே அதிகம் என்றார். மாதர் தங்கள் சுகாதாரத்திலும் தங்கள் குடும்பத்தாரின் சுகாதாரத்திலும் கூடுதல் பொறுப்பேற்று ஆரோக்கியமாக வாழ்வது தொடர்பில் மாதர் சுகாதாரக் குழு தொடர்ந்து அதன் பங்காளிகளுடன் இணைந்து செயல்படும்.

