பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் 16ஆம் தேதி தொடங்கி இன்று 18ஆம் தேதிவரை மூன்று நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
தமது பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று அவர் சிட்னி நகரில் கல்வியாளர்களையும் தொழில்துறைத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
பின்னர் கேன்பராவில் நடந்த ஏழாவது சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிசுடன் திரு லீ பங்கேற்க இருக்கிறார்.
கொவிட்-19 தொற்று பரவத் தொடங்கிய பிறகு பிரதமர் லீ, ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுதான்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் மற்றும் அரசாங்க உயரதிகாரிகளும் அவருடன் சென்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஃபூ மீ ஹாரும் சக்தியாண்டி சுப்பாட்டும் ஆஸ்திரேலியா சென்றுள்ள சிங்கப்பூர் பேராளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சிட்னியில் இடம்பெற்ற நேற்றைய சந்திப்புகளில் திரு சுப்பாட்டும் இடம்பெற்றிருந்தார்.
அதுபற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனிசையும் அவரின் குழுவினரையும் நாளை (இன்று) சந்திக்க ஆவலாக இருக்கிறோம். ஆஸ்திரேலியாவுடன் அர்த்தமுள்ள, நீண்டகால உறவுகளை எதிர்நோக்குகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
"முக்கிய உலக நிகழ்வுகளில் சிங்கப்பூரின் கண்ணோட்டம் குறித்து ஆஸ்திரேலியர்கள் மிகுந்த ஆர்வமும் நன்மதிப்பும் கொண்டுள்ளனர்," என்று திருவாட்டி ஃபூ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளும் பங்காளிகளாக இணைந்து செயல்பட பல வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா பசுமைப் பொருளியல் உடன்பாட்டின்கீழ், பசுமைப் பொருளியலில் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளால் நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்," என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வணிகம், பொருளியல், சுற்றுச்சூழல் நோக்கங்களுடன் கூடிய இத்தகைய உடன்படிக்கை மேற்கொள்ளப்படுவது உலகில் இதுவே முதன்முறை எனச் சொல்லப்படுகிறது.
கேன்பராவிற்கு நேற்று வருகைதந்த பிரதமர் லீயையும் அவரின் துணைவியார் ஹோ சிங்கையும் ஆஸ்திரேலியாவிற்கான சிங்கப்பூர் துணைத் தூதர் ஹேரால்டு லீயும் (இடது) ஆஸ்திரேலியப் பிரதமருக்கான உதவி அமைச்சர் பேட்ரிக் கோர்மனும் வரவேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

