சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பணவீக்கம் வரும் ஆண்டு 4.6% ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுவ தாக செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வு கூறுவதாக சிங்கப்பூர் பணவீக்க எதிர்பார்ப்பு ஆய்வு அட்ட வணையின் ஆகப்புதிய காலாண்டு அறிக்கை (SInDex) தெரிவிக்கிறது.
அதற்கு முன்னதாக ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த எதிர்பார்ப்பு 3.9% ஆக இருந்தது. பணவீக்கம் 4.6% உயர்ந்தால் அது 11 ஆண்டுகளில் இல்லாத ஓர் அளவாக இருக்கும்.
இதற்கு முன்னதாக 2011 டிசம்பரில்தான் பணவீக்கம் 4.6% ஆக இருந்தது. ஒப்பிட்டுப் பார்க்கையில், கடந்த 2012 முதல் 2021 வரை 3வது காலாண்டு சராசரி பணவீக்கம் சுமார் 3.2% ஆக இருந்தது.
இந்தப் பணவீக்கம் 2023ல் சராசரியாக 3.5% ஆக இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணைய புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரைப்பட்ட காலத்திற்கான அனைத்து பொருள்கள், சேவைகளுக்குமான பணவீக்கம் 5.7% அதிகரித்து இருக்கிறது என்பது ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் 7.5% ஆக உள்ளது. டிபிஎஸ் வங்கியும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் நேற்று அந்தக் காலாண்டு அறிக்கையை வெளியிட்டன.
சிங்கப்பூரின் பல்வேறு வகை குடும்பங்களையும் பிரதிநிதிக்கும் வகையில் 500 பேரை உள்ளடக்கி அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கொவிட்-19ன் தாக்கத்தைச் சமாளிக்க பல கொள்கைகள் இருந்தாலும் கூட உலகளவில் நிச்சயமில்லாத நிலை இருக்கிறது. பொருளியல் பிரச்சினைகள் உள்ளன.
இவற்றின் தாக்கம் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியிலும் பணவீக்கத்திலும் இருக்கும் என்று பயனீட்டாளர்கள் நம்புவதாக டிபிஎஸ் வங்கியும் இந்தப் பல்கலைக்கழகமும் கூட்டறிக்கையில் கூறின.
ரஷ்யா-உக்ரேன் போர் காரணமாக பொதுவான விலை அதிகரிப்பு இருக்குமென 29.7% பயனீட்டாளர்கள் கருதுகிறார்கள்.

