கைத்துப்பாக்கி வடிவில் இருந்த தீமூட்டிச் சாதனம் ஒன்றை ஆயுதமாகக்கொண்டு, காத்தோங் ஷாப்பிங் சென்டரில் செயல்படும் சிகை அலங்கார நிலையம் ஒன்றில் புகுந்து அங்கிருந்த ஒருவரிடம் $900 பணத்தை இரண்டு பேர் கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அந்த இருவரில் ஒருவர் 14 வயது பதின்ம வயது இளைஞர். மற்றொருவர் ஹோ ஹீன் செங், 36, என்ற மலேசியர். அந்த இருவரும் பின்னர் பொருள்களைத் திருடியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்து 24 மணி நேரத்திற்குள் இருவரும் கைதாயினர். கொள்ளை அடித்ததாக அவர்கள் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
கொள்ளைச் சம்பவம், எண் 865 மவுண்ட்பேட்டன் ரோடு முகவரியில் உள்ள காத்தோங் ஷாப்பிங் சென்டரில் அக்டோபர் 14ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்கு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

