புதிய இருவகை ஆற்றல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தடுப்பூசி நிலையங்களில் மக்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவரும் சூழலிலும், சிங்கப்பூரர்கள் ஆண்டிறுதி பயணங்களை திட்டமிட்டு வருவதாலும், புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பலர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
திங்கட்கிழமை (அக்டோபர் 17) அன்று இருவகை ஆற்றல் தடுப்பூசியை வழங்கும் நான்கு நிலையங்களுக்கு ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றிருந்தது.
காத்திருக்கும் நேரம் அரை மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் எனக் கூறப்பட்டது.
இந்த புதிய தடுப்பூசி வழங்க தொடங்கியதிலிருந்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தடுப்பூசி நிலைய ஊழியர்கள் சிலர் கூறினர்.
ஒரு தடுப்பூசி நிலையத்தில் நண்பகலுக்குள் 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. புதிய தடுப்பூசியை வழங்குவதற்கு முன் இந்த எண்ணிக்கை 100ஆக இருந்தது. அனைத்து நிலையங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.
கொவிட்-19 கிருமி, ஓமிக்ரான் கிருமி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் மொடர்னா நிறுவனத்தின் ‘ஸ்பைக்வேக்ஸ்’ கொவிட்-19 இருவகை ஆற்றல் தடுப்பூசிக்கு சுகாதார அறிவியல் ஆணையம் செப்டம்பரில் அனுமதி வழங்கியது.
நவம்பர் மாதத்துக்குள் நாள்தோறும் 15,000 பேருக்குக் கிருமி தொற்றலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது.
புதிய தடுப்பூசிக்கான தேவை அதிகரிப்பதால், தடுப்பூசி நிலையங்கள் நாள்தோறும் திறந்திருக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.
இன்னும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் அல்லது தடுப்பூசியை ஐந்து மாதங்களுக்கு முன் கடைசியாகப் போட்ட 50 வயதுக்கும் மேற்பபட்டவர்கள் புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.