தங்கள் மகளின் கைகளும் கால்களும் கட்டப்பட்டு வாய் ஒட்டுவில்லையால் அடைக்கப்பட்ட காட்சியைக் கொண்ட காணொளி சீனாவில் உள்ள தம்பதிக்குக் கிடைத்திருக்கிறது. காணொளியில் அடையாளம் தெரியாத ஒருவர் பெற்றோரிடம் பணம் தருமாறு மிரட்டியிருக்கிறார்.
உட்லண்ட்சில் உள்ள 22 வயது ஆடவரின் வீட்டுக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கு அந்த 19 வயது பெண் பாதுகாப்பாகத்தான் இருந்திருக்கிறார். சீனாவைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்படும் மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
இம்மாதம் 14ஆம் தேதியன்று பெண்ணைக் காணவில்லை என்று தங்களுக்குப் புகார் வந்ததென காவல்துறை கூறியது. அன்றைக்கே காவல்துறை அதிகாரிகள் பெண்ணை அடையாளம் கண்டு கண்டுபிடித்தனர்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதன் தொடர்பில் குற்றவாளிகளை ஈர்த்து அவர்களைப் பிடிக்க தான் கடத்தப்பட்டதுபோல் காணொளி ஒன்றைப் பதிவுசெய்யவேண்டும் என்று பெண்ணிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தில் அப்பெண் 170,000 வெள்ளியை இழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

