ரெட் ஸ்வாஸ்திகா பள்ளி பாதுகாவலர்மீது காரை ஏற்றி விடப்போவதாக மிரட்டிய பென்ட்லி சொகுசு கார் ஒட்டுநருக்கு 8 வாரம் சிறை தண்டனையும் $600 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
மேலும், 61 வயதான நியோ ஹோங் சாய் அடுத்த 12 மாதங்களுக்கு எந்தவொரு வாகனமும் ஓட்டக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்குக் காயம் ஏற்படுத்தியது, காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய இரண்டு குற்றங்களையும் நியோ ஒப்புக்கொண்டார். காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி 11ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. இது காணொளியில் பதிவுசெய்யப்பட்டு சமூகத் தளங்களில் பகிரப்பட்டது.
பள்ளிக்கு வெளியே வரிசையில் இருந்த மற்ற வாகனங்களை முந்திக்கொண்டு நியோ பள்ளி வளாகத்திற்குள் நுழைய முற்பட்டார். அவர் காருக்கு முன்னால் வழிமறித்து நின்ற பாதுகாவலரைப் பொருட்படுத்தாது, தனது வாகனத்தை முன் செலுத்தி, பாதுகாவலர்மீது வாகனத்தை மோதினார் நியோ. பாதுகாவலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த அன்றே நியோ கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நியோவின் மகன் கிலின் நியோ, 28, வாகனத்தின் உரிம தட்டின் எண்ணை மாற்றியதற்காகவும், காப்புறுதி இல்லாமல் தனது தந்தையை வாகனத்தை ஓட்ட அனுமதித்ததற்காகவும் மே மாதம் குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.