உலகப் பொருளியல் மந்தமடையக்கூடும்; அதைக் கருத்தில்கொண்டு செயல்படுவதாக உலகின் ஆகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான சிங்கப்பூரின் 'ஜிஐசி' தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் பணவீக்கம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் உலகளவில் பொருளியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று 'ஜிஐசி' தலைமை நிர்வாகி லிம் சாவ் கியட் கூறினார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் அவ்வாறு சொன்னார்.
"இல்லாவிடில் பொருளியல்களும் நிதிச் சந்தைகளும் நீண்ட காலம் சவால்களை எதிர்நோக்கக்கூடும்," என்று திரு லிம் எச்சரித்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 'ஜிஐசி'யின் அலுவலகத்தைத் திறந்துவைத்தபோது அவர் பேசினார். உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது, பணவீக்கத்தால் உயரும் வாழ்க்கைச் செலவினம், வேகமாக மெதுவடையும் சீனாவின் பொருளியல் ஆகிய காரணங்களால் உலகப் பொருளியல் மந்தமடையக்கூடும் என்ற அச்சம் அதிகமாகி வருகிறது. அடுத்த ஆண்டில் உலகப் பொருளியல் 2.7 விழுக்காடு வளரும் என்று அனைத்துலகப் பண நிதியம் கணித்திருந்தது. எனினும், உலகப் பொருளியலில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ள நாடுகளின் பொருளியல்கள் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு சுருங்கும் என்றும் நிதியம் குறிப்பிட்டது. "பொருளியல் மேலும் மெதுவடையும். எவ்வளவு மெதுவடையும், அந்நிலை எத்தனை காலம் தொடரும் போன்ற விவரங்கள் தெரியவில்லை," என்றார் திரு லிம். எனினும், உலகளவில் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி பணவீக்க விகிதத்தை ஒருவழியாகக் குறைக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் பொருளியல் ஓரளவு மீள்திறனுடன் இருப்பதால் அந்நாட்டின் மறுபயனீட்டு எரிசக்தித் துறை, அத்துறையுடன் தொடர்பு உடைய மற்றவை ஆகியவற்றில் இருக்கும் வாய்ப்புகளை 'ஜிஐசி' ஆராய்வதாகத் திரு லிம் தெரிவித்தார். 'ஜிஐசி' தற்போதைக்கு ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட திட்டங்களை அதிகம் கையாளவில்லை. குறிப்பாக சொத்துச் சந்தை தொடர்பான ஆஸ்திரேலியத் திட்டங்களைத்தான் 'ஜிஐசி' கையாள்கிறது. இருந்தாலும், உலகளவில் எரிசக்தி உருமாற்றத்தில் ஆஸ்திரேலியா பெரும்பங்கு வகிக்கலாம் என்று திரு லிம் சுட்டிக்காட்டினார்.

