கத்தியால் ஒருவரை காயப்படுத்தியதற்காக 21 வயது ஆடவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஒருவரை வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றச்சாட்டை டேனியல் ராஜ் பர்னபாஸ் ரவீந்திரன் எதிர்நோக்குகிறார்.
கிரண் ராஜ், 27, என்பவரை டேனியல் ராஜ் மார்சிலிங் டிரைவ் புளோக் 8க்கு அருகே உள்ள விளையாட்டு மைதானத் திடலில் தாக்கியதாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18) அன்று நள்ளிரவு சுமார் 1.20 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
கிரண் ராஜ், டேனியல் ராஜ் ஆகிய இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர் என்றும், அச்சமயத்தில் டேனியல் ராஜ் கிரணைக் கத்தியால் தாக்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு ஓடிவிட்டதாகவும் காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கிரண் ராஜ்க்கு முதுகிலும் வலது கையிலும் காயங்கள் ஏற்பட்டு, அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்டது. இருவருக்கும் முன்னதாகவே பழக்கமிருந்தது என்று நம்பப்படுகிறது.
சம்பவம் நடந்த 17 மணிநேரத்துக்குள் சந்தேக நபரை உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் அடையாளம் கண்டு அவரை கைதுசெய்தனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தியும் மீட்கப்பட்டது.
டேனியலின் வழக்கு நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.