குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், எதிர்காலத்தில் பராமரிப்புப் பணிகள் நடக்கும்போது அதிகமான மின்உற்பத்திச் சாதனங்களை (ஜெனரேட்டர்கள்) ஆயத்தநிலையில் வைத்திருக்கும்.
சோதனைச்சாவடிகளில் மின்தடை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு இடம்பெறும் என்று உள்துறை துணை அமைச்சர் ஃபைசல் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இந்த மாதத் தொடக்கத்தில் மின்சாரம் தடைப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததால் குடிநுழைவுச் சேவைகள் பல மணிநேரம் தாமதம் அடைந்தன.
அந்தச் சம்பவத்திற்கு முன்னதாகவே உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் மின்வசதி ஏற்பாடுகளை மேலும் மேம்படுத்த இந்த ஆணையம் ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தது.
இந்தத் திட்டத்தின்படி அவற்றில் அமைக்கப்படும் இரண்டாம் நிலை மின்சார உள்கட்ட மைப்பு வசதிகளுக்கு உறுதுணை யாக அந்த மின் உற்பத்திச் சாதனங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அக்டோபர் 8ஆம் தேதி இரவு நேரத்தில், கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் 11.40 மணிக்கு மின் கட்டமைப்பு வசதிகளில் ஆணையம் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொண்டது.
அப்போது துணை மின் உற்பத்திச் சாதனங்கள் இயக்கி விடப்பட்டன. அவை மின்சாரத்தை வழங்கின. ஆனால் அன்று இரவு சுமார் 12.20 மணிக்குத் திடீரென்று அந்தத் துணைச் சாதனம் காற்றுக் குழாய் கோளாறு காரணமாக நின்றுவிட்டது. அதனால் மின்சாரம் தடைப்பட்டது. இதன் விளை வாக குடிநுழைவுச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதிகாலை 4 மணிக்கு மீண்டும் மின்சாரம் திரும்பியது.
குடிநுழைவுச் சேவைகள் அதிகாலை சுமார் 5.15 மணிக்கு மீண்டன என்று இணைப் பேராசிரியர் ஃபைசல் விளக்கினார்.
மின்தடை நேரத்தில் யாராவது சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது போன்ற பாதுகாப்பு மீறல் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
அதிகாரிகள் மிக முக்கியமான வாயில்களில் தொடர்ந்து பணியில் இருந்தார்கள். அவர்களிடம் கையடக்க விளக்குகள் இருந்தன. மின்தடை நேரத்தில் பாதுகாப்புச் சுற்றுக்காவல்களும் அதிகரிக்கப்பட்டன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

