அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்கள் சீனாவின் கைக்குக் கிடைப்பதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா புதிய நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் விளைவாக சிங்கப்பூரின் கணினிச் சில்லு தொழில்துறையும் பாதிக்கப்படும்.
என்றாலும், இந்தப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சீனாவுக்கான அதிநவீன கணினிச் சில்லுகள், தொடர்புடைய சாதனங்களை விற்பதற்குத் தடை விதிக்கும் நோக்கத்தில் அக்டோபர் 7ஆம் தேதி அமெரிக்கா பல ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிவித்தது.
சீனாவின் பல்வேறு கணினிச் சில்லு தயாரிப்பு நிறுவனங்களில் வேலை பார்க்க அமெரிக்க குடிமக்களுக்கும் அமெரிக்க நிரந்தரவாசிகளுக்கும் தடை விதிக்கப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்தது.
இது பற்றி தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ கேட்ட கேள்விக்குப் பதிலளித்து பேசிய திரு டான், அமெரிக்காவின் அந்த நிபந்தனைகள் சிங்கப்பூரை குறிவைத்து இடம்பெறுவது அல்ல என்றாலும்கூட சிங்கப்பூரில் கணினிச் சில்லு தொழில்துறையும் அவற்றால் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தத் தொழில்துறை மிகவும் சிக்கலானது, உலகமயமானது என்பதே இதற்கான காரணம் என்று அவர் விளக்கினார்.
அமெரிக்கத் தடையால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஈடுசெய்யும் வகையில், இங்கு நிறுவனங்களுடன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
அந்த நிறுவனங்கள் தொழில்களைத் தொடர்ந்து இடையூறு இல்லாமல் நடத்துவதற்குத் தோதான திட்டங்களைப் பலப்படுத்துவது தொடர்பிலும் தங்களுக்குப் பொருள்கள் கிடைக்கும் வழிகளை நிறுவனங்கள் பலமுனைப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

