சிங்கப்பூர் துறைமுகங்கள் இப்போது தங்கள் மொத்த கூடினபட்ச கையாளும் ஆற்றலில் சுமார் 85% அளவுக்கு செயல்படுகின்றன.
இது, கப்பல் நிறுவனங்களால் ஏற்படக்கூடிய குறுகியகால தேவை அதிகரிப்புகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்று தெரிவிக்கப் பட்டது.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
துவாஸ் துறைமுகத்தில் மேலும் அணைகரைகள் திறக்கப்படும்போது துறைமுகத்தின் ஆற்றல் கூடும் என்று கூறிய அவர், சென்ற ஆண்டில் சிங்கப்பூர் சாதனை அளவாக 20 அடி நீள 37.5 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டு இருக்கிறது என்றார்.
பீஷான்-தோ பாயோ உறுப்பினரான சக்தியாண்டி சுப்பாட்டிற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், சிங்கப்பூரின் இப்போதைய கூடினபட்ச சரக்கு கையாளும் ஆற்றல் அளவு ஆண்டு ஒன்றுக்கு 44 மில்லியன் கொள்கலன்கள் என்றும் கூறினார்.

