தனியார் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டை விற்றுவிட்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறு விற்பனை வீட்டை வாங்க 15 மாத காலம் காத்திருக்க வேண்டும் என்ற விதி அமலாகி உள்ளது.
அதற்கு எதிராக அவர்களில் பலரும் மேல்முறையீடு செய்தனர். அதில் ஏறத்தாழ 220 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவர்களைப் பொறுத்தவரை அந்தக் காத்திருக்கும் காலத்தை கழகம் தள்ளுபடி செய்துவிட்டது.
காத்திருப்பு கால நிபந்தனை செப்டம்பர் 30ஆம் தேதி நடப்புக்கு வந்தது. அதற்கு முன்னதாகவே வீவக மறுவிற்பனை வீட்டை வாங்கு வதற்கான விருப்ப உரிமையை அவர்கள் பெற்றிருந்ததாக அமைச்சர் விளக்கினார்.
வீடு ஒன்றை வாங்குவதற்கான விருப்ப உரிமை என்பது, வீட்டை விற்பதற்கான சட்டபூர்வமான உடன்பாடாகும். கழகம் இன்றுவரை ஏறத்தாழ 650 மேல்முறையீடுகளைப் பெற்றிருக்கிறது.
மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வீவக மறுவிற்பனை வீடு ஒன்றை வாங்குவதற்கான விருப்ப உரிமையைப் பெறாதவர்கள். அல்லது ஏற்கெனவே விற்பதற்குக் கடப்பாடு கொண்டிருப்பவர்கள். அல்லது அண்மையில் தங்கள் சொந்த வீட்டை விற்றிருப்பவர்கள்.
அந்த 430 மேல்முறையீடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அதனதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
மறுவிற்பனை வீட்டுச் சந்தை வேகத்தை மட்டுப்படுத்துவதற்காக ஆகக் கடைசியாக செப்டம்பர் 30ஆம் தேதி 15 மாத காத்திருப்பு நிபந்தனை நடப்புக்கு வந்தது.
இப்போதைய தனியார் வீட்டை விற்றதற்குப் பிறகு 15 மாதம் கழித்துதான் வீவக மறுவிற்பனை வீட்டை, வீட்டு மானியம் இல்லாமல் அவர்கள் வாங்க முடியும்.
கடந்த மூன்றாண்டுகளில் கைமாறிய வீவக மறுவிற்பனை வீடுகளில் 10ல் ஒரு வீட்டை தனியார் சொத்து உரிமையாளர் வாங்கினார். அவர் தன்னுடைய தனியார் வீட்டை விற்றுவிட்டு வீவக மறுவிற்பனை வீட்டுக்கு மாறினார்.
இப்படி தனியார் வீட்டை விற்றுவிட்டு வீவக வீட்டை வாங்குவோரிடம் பொதுவாக அதிகப் பண வசதி இருக்கும்.
முதன்முதலாக வீவக வீட்டை வாங்குவோர் அல்லது வீவக சிறிய வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்கு மாறுவோர் ஆகியோருடன் ஒப்பிடும்போது இவர்கள் அதிகம் பணம் கொடுத்து மறுவிற்பனை வீட்டை வாங்க தயாராக இருப்பார்கள்.
வீவக புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது சென்ற ஆண்டில் ஏறத்தாழ 31,000 மறுவிற்பனை வீடுகள் கைமாறின.
இந்த எண்ணிக்கை 2020ல் சுமார் 24,700 ஆகவும் 2019ல் ஏறக்குறைய 23,700 ஆகவும் இருந்தது.
தனியார் வீட்டை விற்றுவிட்டு வீவக வீட்டுக்கு மாறுவோரில் சிலர் 55 அல்லது அதற்கும் அதிக வயதுள்ளவர்கள்.
இவர்கள் தங்கள் ஓய்வுகால திட்டத்தின் ஒரு பகுதியாக சிறிய வீவக மறுவிற்பனை வீட்டுக்கு மாறிக்கொள்ள விரும்புவர்.
நான்கறை அல்லது அதற்கும் சிறிய மறுவிற்பனை வீட்டை வாங்கினால் 15 மாத காலம் இவர்கள் காத்திருக்க வேண்டாம்.

