பாலர் பள்ளிகள் அனைத்தும், அனுமதியின்றி யாரும் உள்ளே வரவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தங்கள் கட்டடங்களைப் பாதுகாப்புடன் வைத்திருக்கவேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெரும்பாலான பாலர் பள்ளிகள் தங்கள் நுழைவாயிலில் மின்னணு தொழில்நுட்பப் பூட்டு களைப் பயன்படுத்துகின்றன.
பரிசோதிக்கப்பட்ட பிறகே யாரும் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்த அவர், பாலர் பள்ளி ஒவ்வொன்றும் யாரெல்லாம் வருகிறார்கள், யாரெல்லாம் போகிறார்கள் என்பதைப் பரிசோதித்து பதியக்கூடிய நடைமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
தாய்லாந்தில் பாலர் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, சிங்கப்பூரில் செயல்படும் பாலர் பள்ளிகளிலும் சிறார் பராமரிப்பு நிலையங்களிலும் இடம்பெறும் பாதுகாப்பு நடைமுறைகள், பயிற்சி, ஆதரவு செயல்திட்டங்கள் பற்றி செங்காங், அல்ஜுனிட் குழுத் தொகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சர், அனைத்து பாலர் பள்ளிகளும் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களைக் கையாள செயல்முறைகளில் தரப்படுத்தப்பட்ட நடைமுறைகளைத் தோற்றுவிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.
எவ்வளவுதான் முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும்கூட, பாலர் பள்ளிகளும் பெற்றோரும் பரந்த அளவில் சமூகமும் எப்போதும் விழிப்பு நிலையில் இருந்து வர வேண்டும். அத்தகைய சம்பவம் நிகழ்ந்தால் அதைக் கையாள ஆயத்தமாகவும் இருக்கவேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
சமூகம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்துவது அடிப்படை ரீதியில் முக்கியமாக ஒன்று என்று அமைச்சர் தெரிவித்தார்.

