மருத்துவக் கருவிகள் எந்த அளவுக்கு இணையப் பாதுகாப்புக்கு எதிராக செயல்படுகின்றன என்பதை சுகாதார பராமரிப்பு சேவை வழங்குவோரும் வாடிக்கையாளர்களும் அறிந்துகொள்ள புதிய தேசிய அடையாளக் குறியீட்டுத் திட்டம் வழிவகுக்கும்.
மருத்துவக் கருவிகளுக்கான இணையப் பாதுகாப்பு அடையாளக் குறியீட்டுத் திட்டம் இனி 'பேஸ்மேக்கர்', 'வெண்டிலேட்டர்' உள்ளிட்ட கருவிகளின் பாதுகாப்பை கணித்து ஒன்று முதல் நான்கு வரையிலான நிலைகளில் குறீயிட்டை வழங்கும். நான்கு என்பது ஆகச் சிறந்த குறியீடு ஆகும்.
முக்கிய தரவுகளைக் கையாளும் அல்லது மற்ற கருவிகளில், கட்டமைப்புகளில், சேவைகளில் இணைக்கக்கூடிய கருவிகளுக்கு இந்தப் புதிய குறியீட்டு முறை பொருந்தும். இவ்வாண்டின் சிங்கப்பூர் அனைத்துலக இணைய பாதுகாப்பு வாரத்தில் நேற்று பேசிய தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
இந்தப் புதிய திட்டம் சுகாதார அமைச்சு, சுகாதார அறிவியல் ஆணையம், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை, ஒன்றிணைந்த சுகாதார தகவல் கட்டமைப்புகள் போன்றவற்றின் கூட்டு முயற்சி என்று புதன்கிழமை அன்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹிய குறிப்பிட்டிருந்தார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் திறன் கருவிகள் எந்த அளவுக்கு இணையப் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள உதவி புரியும் முயற்சிகளின் ஓர் அங்கம்தான் இந்த புதிய மருத்துவக் கருவிகளுக்கான இணையப் பாதுகாப்பு அடையாளக் குறியீட்டு திட்டம். கடந்த 2018ஆம் ஆண்டு சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகள் சிங்கப்பூரின் ஆக அதிகமாக இணைய ஊடுருவல்களுக்கு இலக்காக இருந்தன.
அப்போது சிங்ஹெல்த், ஒன்றிணைந்த சுகாதார தகவல் கட்டமைப்புகள் போன்றவற்றிலிருந்து பிரதமர் லீ சியன் லூங் உள்பட 1.5 மில்லியன் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் இணைய ஊடுருவலுக்கு உள்ளாகின.
அந்த இரு அமைப்புகளுக்கும் பின்னர் தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் மொத்தமாக $1 மில்லியன் அபராதம் விதித்தது.
சிங்கப்பூர் கடந்த 2020ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்பு அடையாள குறியீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதுவரை 300 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 200 பொருள்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
திட்டம் குறித்த மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டும்.
இணைய திறன் சேவைகள் கொண்ட கருவிகள் உலகளவில் பெருகி வருகின்றன என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் அத்தகைய 50 பில்லியன் கருவிகள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் அமைச்சர் ஜனில் கூறினார்.

