மனிதவள அமைச்சு அதிகாரி ஒருவர் தரையில் ஒரு கடன் அட்டையைக் கண்டெடுத்துள்ளார். உடனே வேலையிலிருந்து அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்ட அவர் அந்த கடன் அட்டையைக் கொண்டு $6,000 மதிப்புள்ள தங்க மோதிரம் ஒன்றை வாங்கியுள்ளார்.
மேலும் அவர் அந்த கடன் அட்டை மூலம் தமது ஈஸி-லிங்க் அட்டையில் $20 பணமும் நிரப்பியுள்ளார். மோசடி செயல்களைச் செய்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 36 வயது சியா குவோ ரொங் எனும் ஆடவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மனிதவள அமைச்சில் சியா பணிபுரிந்தபோது அவர் மாதம் $5,000 சம்பளம் பெற்றார் என்று நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
இவ்வாண்டு மார்ச் 16ஆம் தேதி ஹவ்காங் வட்டாரத்தில் அந்த கடன் அட்டையை சியா கண்டெடுத்துள்ளார். அதன் பின்னர் தமக்கு மதியம் அரை நாள் அவசர விடுப்பு வேண்டும் என்று தமது மேலதிகாரியிடம் தகவல் அனுப்பியுள்ளார்.
பிற்பகல் 12.41 மணியளவில் ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்திற்குச் சென்ற அவர் தமது
ஈஸி-லிங்க் அட்டையில் அந்த கடன் அட்டை கொண்டு $20 பணம் நிரப்பி ரயில் மூலம் சைனாடவுன் எம்ஆர்டி நிலையத்திற்கு சியா சென்றார். அங்கே பீப்பள்ஸ் பார்க் காம்பிளக்ஸ் கடைத்தொகுதியில் கைக் கடிகாரங்களும் நகைகளும் விற்கும் கடை ஒன்றில் தமக்கு உயர் தரத்தில் ஒரு தங்க மோதிரம் வேண்டும் என கோரியுள்ளார்.
அங்கு அவர் $6,330 மதிப்புள்ள தங்க மோதிரம் ஒன்றை அவர் கண்டெடுத்த கடன் அட்டை மூலம் வாங்கினார். பரிவர்த்தனை ரசீதில் அவர் போலியான கை யொப்பத்தையும் இட்டார். அதே கடையில் மற்றுமொரு தங்க வளையலை சியா அதே கடன் அட்டை மூலம் வாங்க முயன்றபோது பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டது. உடனே அங்கிருந்து சென்ற சியா, கடன் அட்டையையையும் தங்க மோதிரத்துக்கான ரசீதையும் வீசிவிட்டார். பிறகு ஹவ்காங் எம்ஆர்டி அருகே உள்ள அடகுக்கடையில் அவர் வாங்கிய தங்க மோதிரத்தை $4,550க்கு விற்றுவிட்டார். மோதிரம் விற்றதற்கான ரசீதை வீசிவிட்டு பணத்தை தமது வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டார் சியா. அந்த பணத்தைக் கொண்டு மளிகைப் பொருள்கள் வாங்குவது, கட்டணங்களைக் கட்டுவது, டோட்டோ லாட்டரிச் சீட்டுகள் வாங்குவது போன்ற செயல்களில் சியா ஈடுபட்டு வந்துள்ளார்.
சியா சில ஆண்டுகளாகவே நிதி நெருக்கடியில் இருந்ததால் 'ஆசைக்கு மயங்கிவிட்டார்' என்று தற்காப்பு தரப்பு கூறியது. அன்றாட செலவுகளை ஈடுகட்ட 'ஏதாவது அதிசயம் நடக்காதா' என்றுதான் அவர் டோட்டோ லாட்டரிச் சீட்டுகளையும் வாங்கினார் என்று அது குறிப்பிட்டது.

