கத்தியால் ஒருவரைத் தாக்கியதாக இளையர்மீது குற்றச்சாட்டு
கத்தியால் ஒருவரை காயப்படுத்தியதாக 21 வயது ஆடவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஒருவரை வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றச்சாட்டை டேனியல் ராஜ் பர்னபாஸ் ரவீந்திரன் எதிர்நோக்குகிறார்.
கிரண் ராஜ், 27, என்பவரை டேனியல் ராஜ் மார்சிலிங் டிரைவ் பிளோக் 8க்கு அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் தாக்கியதாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம் குறித்து இம்மாதம் 18ஆம் தேதி பின்னிரவு சுமார் 1.20 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
கிரண் ராஜ், டேனியல் ராஜ் ஆகிய இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர் என்றும் அச்சமயத்தில் டேனியல் ராஜ் கிரணைக் கத்தியால் தாக்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கிரண் ராஜ்க்கு முதுகிலும் வலது கையிலும் காயங்கள் ஏற்பட்டு, அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்டது. இரு நபர்களுக்கும் முன்னதாகவே தொடர்புள்ளது என்று நம்பப்படுகிறது.
சம்பவம் நடந்த 17 மணிநேரத்துக்குள் சந்தேக நபரை உட்லண்ட்ஸ் காவல்துறை பிரிவு அதிகாரிகள் அடையாளம் கண்டு கைதுசெய்தனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தியும் மீட்கப்பட்டது.
டேனியலின் வழக்கு நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
$150,000 மதிப்புள்ள கோழி, பன்றி இறைச்சி மோசடி: ஊழியருக்கு சிறை
தமது நிறுவனத்தின் பணத்தைக் கொண்டு $150,000 மதிப்புள்ள கோழி, பன்றி இறைச்சியை வாங்கி, அந்த மாமிசத்தை மீண்டும் வேறு இடத்தில் விற்று பணத்தை கையாடல் செய்துள்ளார் திரு டான் ஹான் பூன், 50.
இந்த மோசடி செயலுக்காக திரு டானுக்கு நேற்று
18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கனடா-யா எனும் ஜப்பானிய ரேமன் உணவகத்தில் திரு டான் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணி புரிந்துவந்துள்ளார். அப்போது அவருடைய மாதச் சம்பளம் $2,800.
நிறுவனத்தில் பகுதி நேர ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை மேற்பார்வையிடுவது அவரது பொறுப்புகளில் ஒன்று. மேலும் ஒவ்வொரு மாதமும் உணவு விநியோகிப்பாளர்களிடையே உணவுப் பொருள்களையும் மளிகைப் பொருள்களையும் வாங்குவதற்கு அவருக்கு மாதம் $2,000 கொடுக்கப்பட்டது.
டான் பணியில் அமர்த்திய பகுதி நேர ஊழியர்கள் முறையாக பணியில் அமர்த்தப்படவில்லை என்ற சந்தேகத்தின்பேரில் நிறுவனம் அந்த ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுப்பதை ஒத்தி வைத்தது. ஆனால் அவர்களுக்கு ஊதியத்தைத் தமது சொந்த பணத்திலிருந்து கொடுப்பதற்காக கடன் முதலைகளிடம் கடன் வாங்கினார் டான்.
அதைத் திருப்பிக் கொடுக்க சிறியதாகத் தொடங்கி பிறகு $154,000 வரை நிறுவனத்தில் கையாடல் செய்யும் திட்டத்தை டான் தீட்டினார். அக்டோபர் 2020ல் அவரது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவருக்கு மேலும் இரு வாரங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தவணை முறையில் பொருள்கள் வாங்க கோட்பாடுகள் அறிமுகம்
பொருள்களை வட்டி இல்லா தவணை முறையில் வாங்கும் பழக்கம் அதிகரித்து வரும் வேளையில் வர்த்தகர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கும் புதிய கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தவணை முறையில் வாடிக்கையாளர்கள் பொருள்களை அல்லது சேவைகளை வாங்கும் நாளன்று எந்த கட்டணமும் இல்லாமல் வாங்குகின்றனர். ஆனால் அதன் முழு விலையை பிறகு முழுமையாக அல்லது மூன்று முதல் நான்கு மாதாந்தர தவணைகளில் கட்டுகின்றனர்.
இதனால் வாடிக்கையாளர்கள் கடனுக்குள் தள்ளப் படுகின்றனர் என்ற கவலைகள் அதிகரிக்கவே, சிங்கப்பூர் நிதி தொழில்நுட்பக் கழகம் புதிய வழிகாட்டிகளைக் கொண்ட கோட்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு வாடிக்கையாளரின் மொத்தக் கட்டணங்கள் $2,000க்கு மேல் இருக்கக்கூடாது. கட்டணங்களில் பிரச்சினைகள் இருந்தால் வாடிக்கையாளர் தவணை முறை கட்டண சேவைகளைப் பெறுவதற்குத் தடை விதிப்பது போன்ற வழிகாட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

