இந்த வாரத் தொடக்கத்தில் அங் மோ கியோவில் உள்ள கட்டுமானத் தளத்தின் நுழைவாயிலை வாகனத்தை நிறுத்தி மறித்தனர் பத்து வெளிநாட்டு ஊழியர்கள்.
தங்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவர்கள் கூறினர். அவர்களில் ஐவரின் சம்பள பாக்கியை ஸெங்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வழங்கியிருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தை வேலைக்கு அமர்த்திய முதன்மை குத்தகை நிறுவனமான ஷாங்காய் சோங் கீ நிறுவனமும் அதன் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக அமைச்சு ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளது. எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்னும் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரணை தொடர்வதாகவும் அமைச்சு கூறியது.
வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் இழைக்கப்பட்டதா என்பது தொடர்பில் இரு நிறுவனங்களும் விசாரிக்கப்படுவதாகவும் மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

