வரும் செவ்வாய்க்கிழமை முதல் தகுதிபெறும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் மொடர்னாவின் 'ஸ்பைக்வேக்ஸ்' இருவகை திறன் கொண்ட கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு அதிகம் இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
18 வயதைத் தாண்டிய சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் இருவகை திறன் கொண்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. இருவகை தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்குக் குறைந்தது ஐந்து மாதங்களுக்கு முன்பு அவர்கள் கடைசி தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
தீவெங்கும் உள்ள ஒன்பது ஒருங்கிணைந்த பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் ஒன்றுக்குச் சென்று சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். முன்பதிவு செய்துகொள்ளத் தேவையில்லை.
இருவகை திறன் கொண்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தங்களின் பெயர்கள் உள்ள தகுந்த சுகாதாரப் பராமரிப்பு அடையாள அட்டையை ஒருங்கிணைந்த பரிசோதனை, தடுப்பூசி நிலையத்தில் காட்டவேண்டும் என்று சுகாதார அமைச்சு சுட்டியது. அடையாள அட்டை இல்லாதோர் தங்களின் நிறுவனம் அல்லது அமைப்பின் பெயர் பதிவிடப்பட்ட அதிகாரபூர்வ கடிதத்தை சமர்ப்பிக்கவேண்டும்.
வேலை காரணமாக நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குப் புதிய தடுப்பூசி போட அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரலாம்.
முதன்முதலில் தலைதூக்கிய கொவிட்-19 கிருமி வகை, ஓமிக்கிருமி ஆகிய இரண்டுக்கும் எதிராக புதிய தடுப்பூசி பாதுகாப்பு வழங்குகிறது. நேற்று முன்தின நிலவரப்படி 28,000க்கும் அதிகமானோர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது அதற்காகப் பதிவுசெய்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

