கடன் அட்டை, பணப் பரிவர்த்தனை தகவல்கள் கசியவில்லை என கேரோசல் உறுதி
பிரபல கேரோசல் இணையச் சந்தைத் தளத்தில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் பயனீட்டாளர்களின் தகவல்கள் ரகசிய இணையத்தளத்திலும் கணினி ஊடுருவல் கருத்தரங்குத் தளங்களிலும் விற்கப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
திருடப்பட்டதாக நம்பப்படும் கணினித் தரவுத்தளத்தில் 2.6 மில்லியன் பயனீட்டாளர்களின் தகவல்கள் இருக்கின்றன. அவை $1,000 விலைக்கு விற்கப்படுகின்றன. இந்தத் தகவல் திருட்டு காரணமாக 1.95 பயனீட்டாளர்கள் பாதிக்கப்படுவதாக கேரோசல் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அது பற்றி இந்த இணையச் சந்தை நிறுவனம் தகவல் தெரிவித்தது.
கணினி முறையில் எதிர்பாராமல் ஒரு பிரச்சினை ஏற்பட்டதாகவும் மூன்றாம் தரப்பு ஒன்று அங்கீகாரம் இல்லாமல் தகவல் வளத்தை எட்டி தகவல்களைத் திருடி இருப்பதாகவும் கேரோசல் குறிப்பிட்டது.
அந்தப் பிரச்சினை சரிப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அதன் பேச்சாளர் கூறினார்.
கடன் அட்டை, பணப் பட்டுவாடா தொடர்பான தகவல்கள் எதுவும் கசியவில்லை என்று கேரோசல் பயனீட்டாளர்களிடம் உறுதிபட கூறியது. திருடப்பட்ட 2 ஜிபி அளவிலான தகவல்களை அக்டோபர் 12ஆம் தேதி ஊடுருவல் பேர்வழிகள் இணையத்தில் பதிவேற்றினர்.
அதற்கு இரண்டு நாள் முன்னதாக இந்தத் தகவல் கசிவு பற்றி கேரோசல் தெரிவித்தது.
பயனீட்டாளர்களின் பெயர், முதல், கடைசிப் பெயர்கள், மின் னஞ்சல் முகவரி, கைப்பேசி எண், நாடு, கணக்கு ஏற்படுத்தப்பட்ட தேதி, எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்ற விவரம் முதலான பலவும் கசிந்து இருக்கின்றன.
இதனிடையே, அந்தத் தகவல்களில் ஐந்து பதிப்புகளை மட்டுமே தாங்கள் விற்கப்போவதாக ஊடுருவல் பேர்வழிகள் தெரிவித்துள்ளனர். இரு பதிப்புகள் விற்றுவிட்டதாக அவர்கள் கூறினர்.
இவ்வேளையில், இந்தத் தகவல் கசிவு பற்றி பிரத்தியேக தகவல் பாதுகாப்பு ஆணையம், தனக்குத் தெரியும் என்று தெரிவித்தது. புலன்விசாரணை தொடங்கி இருப்பதாகவும் அது கூறியது.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை அமைப்பு, கேரோசல் நிறுவனத்தை எட்டி உதவி வழங்குவதாகக் குறிப்பிட்டது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்களுடன் தொடர்புகொண்டு போலியான மின்னஞ்சல் குறுஞ்செய்திகள் பற்றி எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கடவுச் சீட்டு போன்ற தகவல்களைக் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்றும் கேரோசல் அறிவுரை கூறி இருக்கிறது.

