தீபாவளி குதூகலத்தை வெளிநாட்டு ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ள நிகழ்ச்சி ஒன்று திங்கட்கிழமை (அக்டோபர் 23) அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கோலம் போடுவது, நடனம், விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நிகழ்ச்சியில் இடம்பெற்றன. ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள பெஞ்சுரு பொழுதுபோக்கு நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மனிதவள அமைச்சுடன் இணைந்து சில அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. மனிதவள மூத்த அமைச்சர் ஸாக்கி முகம்மது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ரங்கோலி கோலங்கள் வரைந்தனர். மிகப்பெரிய ரங்கோலியை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த ரங்கோலி கலைஞர் விஜயா மோகன் ஊழியர்களை வழிநடத்தினார். ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கு பற்றுச்சீட்டுகளும் மற்ற பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தீபாவளி தின்பண்டங்கள், கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் கொடுக்கப்பட்டன.
இரண்டு வருடம் நீடித்த கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், தீபாவளியைக் கொண்டாட இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்று 'மை பிரதர்எஸ்ஜி' அமைப்பின் நிறுவனர் தம் வாய் ஜியா குறிப்பிட்டார். மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரர்களுடன் ஒன்றிணைய இந்த நிகழ்ச்சி உதவியதாகவும் அவர் கூறினார்.


