சிங்கப்பூர் 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தில் சமநிலை காணும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (படம்) கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரம் 2022ல் உரையாற்றுகையில் அவர் அவ்வாறு கூறினார்.
கரியமில வாயு வெளியேறும் அளவும் காற்று மண்டலத்தில் இருந்து அது வெளியேற்றப்படும் அளவும் சமமாக இருந்தால் அது கரியமில வாயு வெளியேற்றச் சமநிலை எனப்படும்.
முன்னதாக அரசாங்கம் 2050ஆம் ஆண்டுக்குள் இத்தகைய சமநிலையை எட்ட இலக்கு வகுத்திருந்தது. இப்போது அதனை நோக்கிய பாதையில் சரியாகச் சென்றுகொண்டிருப்பதாக அது உறுதிப்படுத்திஉள்ளது.
சிங்கப்பூர் வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவு 2030ஆம் ஆண்டுக்கு முன்னர் உச்சத்தை எட்டும் என்றும் அவ்வாண்டில் அந்த அளவு ஏறக்குறைய 60 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் திரு வோங் கூறினார்.
முன்னர் ஆண்டுக்கு 65 டன் கரியமில வாயு வெளியேற்றம் என்ற அளவிற்கு சிங்கப்பூர் கடப்பாடு தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
இப்போது 5 மில்லியன் டன் குறைக்கப்பட்டிருப்பது சிங்கப்பூர் போக்குவரத்தின் மூலம் வெளியேறும் கரியமில வாயுவின் அளவை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்திருப்பதற்குச் சமம் என்றார் துணைப் பிரதமர்.
அரசாங்கத் துறைகள் 2045ஆம் ஆண்டு வாக்கில் கரியமில வாயு வெளியேற்றச் சமநிலையை எட்டும். புதிதாகக் கட்டப்படும் ஜூரோங் லேக் வட்டாரக் கட்டுமானங்களுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.
குறைவான கரியமில ஹைட்ரஜன் வாயு பயன்பாடு தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்வதையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதையும் சிங்கப்பூர் அதிகரிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான கடப்பாட்டுடன் சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது. கரியமில வரியை 2030க்குள் படிப்படியாக உயர்த்துதல், கட்டடங்களின் கூரைகளிலும் நீர்த்தேக்கங்களிலும் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை சிங்கப்பூர் மேற்கொண்டிருப்பதைத் திரு வோங் எடுத்துரைத்தார்.
15ஆவது முறையாக நடைபெறும் இவ்வாண்டின் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சியில் அரசாங்கப் பிரதிநிதிகள், தொழில்துறையினர், முதலீட்டாளர்கள், கல்விமான்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

