இந்தோனீசியாவின் தெற்கு சுமத்ராவில் இருந்து சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான உடன்படிக்கை அடுத்த ஆண்டு காலாவதியான பிறகும் இந்த விநியோகம் தொடரும் என்று இந்தோனீசிய எரிசக்தி, கனிமவள அமைச்சர் அரிஃபின் டஸ்ரிஃப் கூறியிருக்கிறார்.
இதன் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய விநியோக ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்றும் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூர் அதன் மின்சாரத் தேவைகளில் 95 விழுக்காட்டை ஈடுசெய்ய இவ்வாறு இறக்குமதியாகும் இயற்கை எரிவாயுவைச் சார்ந்திருக்கிறது. உலகளவில் இயற்கை எரிவாயு விநியோகத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதனால் சிங்கப்பூர் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
அடுத்த ஆண்டு காலாவதிஆகும் உடன்படிக்கையில் சிங்கப்பூரின் 'ஜிஎஸ்பிஎல்' நிறுவனத்திற்குத் தொடர்பு இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
பவர்கேஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான இது, 2000ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காகத் தொடங்கப்பட்டது.
இந்நிறுவனம் 2003ஆம் ஆண்டு முதல் 2023 வரை தெற்கு சுமத்ராவில் இருந்து சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய 12.8 பில்லியன் வெள்ளி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
தெற்கு சுமத்ராவில் இருந்து இறக்குமதியாகும் இயற்கை எரிவாயு, இந்தோனீசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் மொத்த எரிவாயு விற்பனையில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு ஆகும்.
செம்ப்கார்ப் நிறுவனமும் இந்தோனீசியாவிலிருந்து இயற்கை எரிவாயுவை வாங்குகிறது. அது மேற்கு நட்டுனாவில் இருந்து எரிவாயுவைப் பெறுகிறது. சிங்கப்பூர் மலேசியாவில் இருந்தும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.

