மோனலிசா
குடிமை வட்டாரத்தில் அமைந்துள்ள ஒன்பது தேசிய நினைவுச் சின்னங்களைப் பற்றிய பல சுவாரசிய தகவல்களை அறிந்து கொள்ள தேசிய மரபுடைமைக் கழகம் பார்வையாளர்களுக்கு புதிர்ப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
சிங்கப்பூரின் வரலாற்றுத் தகவல்களை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்புதிர்ப்போட்டி நவம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும்.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பிரிவு வழங்கும் இப்போட்டி ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் தொடங்கவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் புதிர் புத்தகம், வரைபடம், குறிப்பு அட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பை வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் நினைவுச் சின்னங்கள் பொருந்திய நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
ஒரு மணி நேரம் நடைபெறும் இப்போட்டி காலை 10 மணி,
11 மணி, நண்பகல் 12 மணி என மூன்று நேரங்களில் நடைபெறும். இப்போட்டியில் 13 வயதிற்கு மேற்பட்டோர் தனியாகவும் 12 வயதிற்கு கீழுள்ளோர் பெற்றோருடன் அல்லது காப்பாளருடன் கலந்து கொள்ளலாம்.
இது குறித்து வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பிரிவின் கொள்கை மற்றும்
கல்வித்துறை மேலாளர் திருவாட்டி ஸ்டெல்லா வூ, "சிங்கப்பூரின் வரலாற்றையும் மரபுடைமையையும் பொது மக்களிடம் சுவாரசியமான முறையில் கொண்டு செல்ல இப்போட்டி நடத்தப்படுகிறது.
"குறிப்பாக, அதிக சிங்கப்பூர் இளையர்களை கவரும் நோக்கில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.
இப்போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை https://nhbpsm.peatix.com/ இணையத்தள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.
எதிர்வரும் 31ஆம் தேதிக்குள் நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்வோருக்கு 20% விலைக்கழிவு வழங்கப்படும்.
நுழைவுச்சீட்டின் விலை, ஏழு முதல் 12 வயதுடையோருக்கு $15, 13 வயது மற்றும் அதற்கு மேலுள்ளோருக்கு $20 ஆகும்.
ஆறு வயது மற்றும் அதற்கு கீழுள்ள பிள்ளைகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.
மேலும் இப்போட்டியின் ஓர் அங்கமாக இன்ஸ்டா இணையப் பக்கத்தில் நடத்தப்படும் தேடுதல் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு தேசிய மரபுடைமைக் கழகத்தின் நினைவுச் சின்னங்களின் வழிகாட்டுச் சுற்றுலாவுக்கான
நுழைவுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்படும்.