தன் வீட்டில் வேலை செய்த இந்தோனீசியப் பணிப்பெண்ணை ஆறு மாதகாலமாகக் கொடுமைப்படுத்தி, நிரந்தரமாக அவரது பார்வைத்திறன் பறிபோகக் காரணமாக இருந்த பெண்ணுக்கு நேற்று பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உம்மி கல்சும் அலி, 43 (படம்), என்ற இந்தப் பெண்ணுக்கு 4,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
வேண்டுமென்றே கடும் காயம் விளைவித்தது, மருத்துவ கவனிப்பு வழங்காததன் மூலம் பணிப்பெண்ணை மோசமாக நடத்தியது உள்ளிட்ட தன்மீதான ஆறு குற்றச்சாட்டுகளை உம்மி ஒப்புக்கொண்டார்.
திருவாட்டி சுகியம் சமத் ரதிமா, 51, என்ற அப்பணிப்பெண்ணுக்குப் பலமுறை போதுமான உணவு வழங்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கப்படுமுன் கவனத்தில் கொள்ளப்பட்டன.
கடந்த 2019 ஆகஸ்ட்டில் திருவாட்டி சுகியம், உம்மியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறப்பட்டது. அவரைக் கண்காணிப்பதற்காக 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தம் வீட்டுச் சமையலறையில் கண்காணிப்புப் படக்கருவியைப் பொருத்தினார் உம்மி.
2020ஆம் ஆண்டு ஏப்ரலில் திருவாட்டி சுகியத்தின்மீது அதிருப்தி அடைந்த உம்மி, அவரது கன்னத்திலும் காதுகளிலும் மாறி மாறி அறைந்தார். அதனால், அப்போது ஹிஜாப் அணியாதிருந்த திருவாட்டி சுகியன் இடக்காது வீங்கிவிட்டது.
அதைக் கண்டும் உம்மி அவருக்கு எந்த முதலுதவியும் அளிக்கவில்லை; மருத்துவரிடமும் அழைத்துச் செல்லவில்லை. அதனால், திருவாட்டி சுகியத்தின் இடக்காது உருமாறிப்போனதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அதே சம்பவத்தில், அவரது கண்களிலும் உம்மி திரும்பத் திரும்பக் குத்துவிட்டார். இதனால் அவர் தமது வலக்கண் பார்வையை இழந்தார்.
பின்னர் தனது கைப்பேசியாலும் துணி உலர்த்தியாலும் திருவாட்டி சுகியத்தின் தலையிலும் தோளிலும் முதுகிலும் உம்மி அடித்தார்.
சில நாள்களுக்குப்பின் தனக்கு வலக்கண் தெரியவில்லை என்று திருவாட்டி சுகியம் கூறியும் உம்மி அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை. மாறாக, வீட்டை விட்டு வெளியே சென்றால் பின்னர் வீடு திரும்பவே முடியாது என்று உம்மி மிரட்டியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
திருவாட்டி சுகியத்திற்கு வலது கண் தெரிவதில்லை என்பதை அறிந்திருந்தும் 2020 ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களுக்கு இடையே உம்மி திருவாட்டி சுகியத்தின் கண்களில் குத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அப்படி ஒரு சம்பவத்திற்குப் பின் திருவாட்டி சுகியத்தின் இடக்கண்பார்வையும் பறிபோனது.
அதன்பின் சுவரைப் பிடித்தும் தரையைத் தடவியபடியும் நடமாடிய அவர், தொடர்ந்து வீட்டு வேலைகளையும் செய்தார்.
பின்னர் 2020 அக்டோபரில் அவர் இந்தோனீசியாவிற்குத் திரும்பினார். செமராங் சென்ற பிறகே அவர் பட்ட துன்பங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. பின்னர் விசாரணையில் உதவுவதற்காக அவர் சிங்கப்பூர் திரும்பினார்.
2019 ஜூலை 76 கிலோவாக இருந்த திருவாட்டி சுகியத்தின் உடல் எடை 2021 பிப்ரவரியில் 52.8 கிலோவாகக் குறைந்து போனது. சிங்கப்பூரில் அவருக்கு மருத்துவ கவனிப்பு வழங்கப்பட்ட போதும் அவருக்கு மீண்டும் கண் பார்வை திரும்பாது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

