லெங் கீ சாலையில் உள்ள அமைந்துள்ள ஒரு தொழிலியல் கட்டடத்தில் சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விடப்பட்டதா என்று ஜூரோங் நகராண்மைக் கழகம் (ஜேடிசி) விசாரித்து வருகிறது.
லெங் கீ ஆட்டோபாயிண்ட் என்ற அந்தக் கட்டடம் 'வெல்த் அசட்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமானது.
எட்டுத் தளங்களைக் கொண்ட அந்தத் தொழிலியல் கட்டத்தில் பல கார் விற்பனை நிலையங்களும் பட்டறைகளும் செயல்பட்டு வருகின்றன. 'யூரோஸ்போர்ட்ஸ் குளோபல்' வாகன நிறுவனம் அவற்றுள் முக்கியமானது.
அங்குள்ள சிறு குத்தகைதாரர்களில் சிலரை அங்கிருந்து வெளியேறும்படி 'வெல்த் அசட்ஸ்' நிறுவனம் கேட்டுக்கொண்டதாக அறியப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
"அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டிற்குத் தொடர்பிராத நிறுவனங்களுக்குத் தங்களது மொத்தத் தளப்பரப்பில் 30 விழுக்காட்டை உள்வாடகைக்குவிட குத்தகைதாரர்கள் ஜேடிசியிடம் அனுமதி கோரலாம். இவ்விவகாரம் குறித்து அறிந்துள்ளோம். விசாரணை இடம்பெற்று வருகிறது," என்று ஜேடிசி பேச்சாளர் சொன்னதாக அச்செய்தி கூறியது.
இதனிடையே, இம்மாதம் 9ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, யூரோஸ்போர்ட்ஸ் வளாகத்தில் தீப்பாதுகாப்பு விதிகள் எதுவும் மீறப்பட்டுள்ளனவா என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சோதனை மேற்கொண்டது.
இதுபற்றி குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் கூறுகையில், "24 லெங் கீ சாலையில் அமைந்துள்ள கட்டட வளாகத்தில் குடிமைத் தற்காப்புப் படை சோதனை மேற்கொண்டது. அப்போது தீப்பாதுகாப்பு தொடபான பல விதிமுறைகள் மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களுக்குக் குற்றச்செயல் அறிக்கைகள் வழங்கி, அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது," என்று விவரித்தார்.
குறிப்பாக, கட்டடத்தின் 7வது, 8வது தளங்களில் அக்குற்றச்செயல்கள் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

