மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா தமது துணைவியாருடன் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ளார். அரச தம்பதியைச் சந்தித்து அவர்களுக்கு மதிய உணவு விருந்தளிப்பதில் தாமும் தமது துணைவியாரும் பெருமகிழ்ச்சி அடைவதாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். பிரதமர் ஃபேஸ்புக்கில் இதை நேற்றுப் பதிவிட்டுள்ளார்.
சந்திப்பின்போது சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான அணுக்கமான உறவைத் தாங்கள் மறுஉறுதிப்படுத்திக்கொண்டதாகத் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக மாமன்னர் தம்பதி தமக்கு அளித்த விருந்தோம்பலுக்கும் அவர்களது பெருந்தன்மைக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட பிரதமர் லீ, அரண்மனையில் அரசியார் தயாரித்த சம்பாலைக் குறிப்பிட்டு நன்றி கூறினார்.
இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதால் இருதரப்பு உறவுகள் மேன்மேலும் வலுவடையும் என்று தாம் நம்புவதாகத் திரு லீ குறிப்பிட்டுள்ளார். மாமன்னர் தம்பதியின் சிங்கப்பூர் பயணம் வெற்றிபெற அவர் வாழ்த்துக் கூறினார்.

