சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய வங்கியான யுஓபி வங்கி, வீட்டில் பராமரிப்பு பொறுப்பு இருப்பதால் வேலையிடத்தில் கூடுதல் நீக்குப்போக்கு தேவைப்படும் 200 பெண்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
அண்மையில் பிள்ளைபெற்ற பெண்கள், வீட்டில் முதியோரைப் பராமரிக்கும் பொறுப்பு உள்ள பெண்கள், வெகுநாள் முன்பு வேலையில் இருந்து விலகினாலும் தற்போது படிப்படியாக மீண்டும் முழுநேர வேலையில் சேர விரும்பும் பெண்கள் போன்றோருக்கு இவ்வாறு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
புதிய 'கிக்+யு விமென்' திட்டம் குறித்து வங்கி நேற்று அறிவித்தது. இதன்கீழ் வங்கியின் பல்வேறு பிரிவுகளில், முழுநேர வேலை, பகுதிநேர வேலை ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும்,
நீக்குப்போக்கான வேலைகளைத் தேடும் பெண்களை உரிய நிறுவனங்களுடன் இணைக்கும் வேலைவாய்ப்பு இணையத்தளமான 'மம்ஸ் அட் வொர்க்' உடன் இணைந்து வங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
'கிக்+யு விமென்' திட்டம் மூலம் வேலையில் சேரும் பெண்களுக்கு அதேபோன்ற வேலையில் உள்ள மற்றவர்களுக்கு ஈடாக சம்பளம், விடுப்பு, மருத்துவக் காப்பீடு ஆகியவை வழங்கப்படும் என்று வங்கி தெரிவித்தது.
இத்திட்டத்தின்கீழ் வேலையில் சேரும் பெண்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ப நீக்குப்போக்கான வேலை நேரம் ஒதுக்கப்படும்.
விருப்பப்படும் பெண்கள் அரை நாள் வேலை, விரும்பிய நேரத்தில் ஈடுபடும் முழுநேர அல்லது பகுதிநேர வேலை, அவ்வப்போது செய்யும் பணி ஒப்படைப்புகள் அடிப்படையிலான வேலை என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ள இயலும்.

