எதிர்பார்த்ததைவிட சிங்கப்பூரின் உற்பத்தித்திறன் கடந்த செப்டம்பர் மாதத்தில் சற்று மிதமாக அதிகரித்திருந்தது.
முக்கியமான மின்னியல் துறையில் மூன்றாவது மாதமாக வளர்ச்சி குறைந்ததன் பின்னணியில் ஆண்டு அடிப்படையில் கடந்த செப்டம்பரில் உற்பத்தி 0.9 விழுக்காடு அதிகரித்தது.
உயிரியல் மருத்துவத் துறையைத் தவிர்த்து கடந்த மாதம் பதிவான வளர்ச்சி அதிகரிப்பு 2% ஆகும் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்தது.
இருப்பினும், புளூம்பெர்க் கணக்கெடுப்பில் ஆய்வாளர்கள் முன்னுரைத்த 1.2% வளர்ச்சியை கடந்த மாதத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரிப்பு தொடவில்லை.
இந்நிலையில் போக்குவரத்துப் பொறியியல், பொது உற்பத்தி ஆகிய துறைகளால் ஆகஸ்ட் மாத 0.5% அதிகரிப்பைக் காட்டிலும் கடந்த மாத அதிகரிப்பு சற்று மேம்பட்டிருந்தது.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் மின்னியல் துறை, ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் துறையின் 40% வளர்ச்சிக் காரணமாக மூன்றாவது மாதமாக இத்துறை சிறிது சரிவைச் சந்தித்துள்ளது.
மாறாக, தகவல்தொடர்பு மற்றும் பயனாளர் மின்னியல் பிரிவில் 21.8% வளர்ச்சி பதிவானது.
ரசாயனத் துறை வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் செப்டம்பரில் 7.1% குறைந்தது.
அனைத்துலக விமானப் பயணங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் பிரிவு உற்பத்தி 12.1% அதிகரித்தது.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22%, உற்பத்தித் துறை சார்ந்ததாகும்.

