சிங்கப்பூரின் ஆக உயரமான வீடு ஷென்டன் வே பகுதியில் கட்டப்பட்டுவருகிறது. 305 மீட்டர் உயரத்தில் அது அமைந்திருக்கும். இந்த சொகுசு 'பென்ட்ஹவுஸ்' வீட்டிலிருந்து தென் சீனக் கடலை தெளிவாகப் பார்க்கலாம். இந்த வீட்டை அடைவதற்காக சிறப்பு மின்தூக்கி அமைக்கப்படும். அதன் வழி 305 மீட்டர் உயரத்தை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சென்றடைய முடியும்.
63 மாடிகள் கொண்டிருக்கும் கட்டடத்தின் மேல் மாடியில் வீடு அமைந்திருக்கும். இந்த வீட்டின் மற்ற அம்சங்கள் குறித்து மேல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கட்டிமுடிக்கப்பட்ட பின்னர், 8 ஷென்டன் வே எனும் இந்தக் கட்டடம் சிங்கப்பூரின் ஆக உயரமான கட்டடமாகவும் திகழும். இந்தக் கட்டடத்தில் அலுவலகங்கள், மற்ற சொகுசு வீடுகள், கடைகள், பொது இடங்கள் ஆகியவற்றோடு ஹோட்டல் ஒன்றும் அமையவுள்ளன.
கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் 2028ல் நிறைவடையும்.
சிங்கப்பூரின் ஆக உயரமான வீடு தற்போது குவாகோ டவுர் (Guoco Tower) கட்டடத்தில் அமைந்துள்ளது. 64 மாடிகள் கொண்டுள்ள இந்தக் கட்டடத்தின் 283.7 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது சிங்கப்பூரின் தற்போதுள்ள ஆக உயரமான வீடு. பிரிட்டிஷ் தொழில்முனைவரான ஜேம்ஸ் டைசன் இந்த வீட்டை 2019ல் $73.8 மில்லியனுக்கு வாங்கினார்.


