சிங்கப்பூருக்குத் தொடர்ந்து சுமத்ராவில் இருந்து எரிவாயு

சிங்கப்பூருக்குத் தொடர்ந்து சுமத்ராவில் இருந்து எரிவாயு

1 mins read
8fde8b0f-cde5-430f-abde-1f466059519e
-

சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டு முதல் இந்தோனீசியாவின் தென் சுமத்ராவில் இருந்து புதிய ஐந்தாண்டு உடன்பாட்டின்கீழ் எரிவாயு விநியோகிக்கப்படும் என்று இந்தோனீசியாவின் எரிசக்தி, சுரங்கவளத் துறை அமைச்சர் ஆரிஃபின் டாஸ்ரிஃப் தெரிவித்தார்.

தென் சுமத்ராவில் இருந்து குழாய் மூலம் எரிவாயுவை அனுப்பு வதற்கான புதிய உடன்பாடு தொடர்பில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

தென் சுமத்ராவில் இருந்து சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் இப்போதைய 20 ஆண்டுகால விற்பனை உடன்பாடு அடுத்த ஆண்டு காலாவதியாகும்.

அதற்குப் பிறகும் சிங்கப்பூருக்கு தென் சுமத்ராவில் இருந்து தொடர்ந்து எரிவாயு அனுப்பப்படும் என திரு ஆரிஃபின் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

சிங்கப்பூர் தன்னுடைய தொழில்துறைகளுக்கும் மின்சக்தி உற்பத்திக்கும் எரிவாயுவையே அதிகம் சார்ந்து இருக்கிறது.

சிங்கப்பூரின் மின் தேவையில் 95 விழுக்காடு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது. இந்தோனீசியா இரண்டு வழித்தட குழாய்கள் மூலம் சிங்கப்பூருக்கு எரிவாயுவை விநியோகிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, மேற்கு நட்டுனாவில் இருந்து சிங்கப்பூருக்கு வேறு ஓர் உடன்பாட்டின் கீழ் எரிவாயு வருகிறது.

சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்தோனீசிய அமைச்சர், தனிப்பட்ட பேட்டி ஒன்றையும் அளித்தார். தென் சுமத்ரா எரிவாயு வயலில் இருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்று பேட்டியில் அவர் கூறினார்.