வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து பத்தாவது காலாண்டாக ஏற்றம் கண்டுள்ளது.
இருப்பினும், பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் ஏற்றத்தால் மறுவிற்பனை விலை அதிகரிப்பு மெது
வடைந்தது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அது 2.6 விழுக்காடு அதிகரித்தது.
இரண்டாம் காலாண்டில் மறுவிற்பனை விலை அதிகரிப்பு 2.8 விழுக்காடாகப் பதிவானது.
அதிகரித்து வரும் விலைவாசி யால் வீடு வாங்குவோர் எண்ணிக்கை குறைந்திருக்கக்கூடும் என்று சொத்து நிபுணர்கள் தெரிவித்தனர்.
இது அவர்களது பொருளாதார நிலையைப் பிரதிபலிப்பதாக அவர்கள் கூறினர்.
"அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, விலை அடிப்படையில் வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய மறுவிற்பனை வீடுகள் தொடர்பான தெரிவுகள் குறையும். இது பெரும்பாலும் நடுத்தர, குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்குப் பொருந்தும். வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்குவோரில் இவர்களே அதிகம்," என்று ஆரஞ்சுடீ அண்ட் டாய் சொத்து முகவையின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த உதவித் தலைவர் கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.
கடந்த மாதம் 30ஆம் தேதியன்று நடப்புக்கு வந்த சொத்து விலை ஏற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளின் காரணமாக இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் வீட்டு விலைகள் தொடர்ந்து குறையும் என்று சொத்து நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். குறைந்தது $1 மில்லியன் வெள்ளிக்கு விற்பனை
யாகும் வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை குறையும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
வீவக கடனின் அதிபட்ச வரம்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில் வீடு வாங்குவோர் விற்போர் தங்கள் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வர் என்றும் இதனால் வீட்டு விற்பனை மெதுவடையும் என்றும் புரோப்பர்ட்டிகுருவின் சிங்கப்பூர் பிரிவு மேலாளர் டான் டீ கூன் கூறினார். வீவக கடனுக்கான அதிபட்ச வரம்பு 85 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் வீடு உரிமையாளர்கள் வீவக மறுவிற்பனை வீடு வாங்க விரும்பினால் தங்கள் தனியார் வீட்டை விற்ற பிறகு 15 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்தம் 7,546 வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்தம் 6,819 வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறின.
வீவக கடன்களின்கீழ் வழங்கப்படும் நிலையான வட்டி விகிதம்தான் பாதுகாப்பானது என்று வீவக மறுவிற்பனை வீடு வாங்குவோர் கருதுவது இந்நிலைக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று ஒன் குளோபல் குழுமத்தின் மூத்த பகுப்பாய்வாளர் மோகன் சந்திரசேகரன் தெரிவித்தார்.

