அடுத்த ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் புதிய உடன்பாடு கையெழுத்து
சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டு முதல் இந்தோனீசியாவின் தென் சுமத்ராவில் இருந்து புதிய ஐந்தாண்டு உடன்பாட்டின்கீழ் எரிவாயு விநியோகிக்கப்படும் என்று இந்தோனீசியாவின் எரிசக்தி, சுரங்கவளத் துறை அமைச்சர் அரிஃபின் டாஸ்ரிஃப் தெரிவித்தார்.
தென் சுமத்ராவில் இருந்து குழாய் மூலம் எரிவாயுவை அனுப்பு வதற்கான புதிய உடன்பாடு தொடர்பில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
தென் சுமத்ராவில் இருந்து சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் இப்போதைய 20 ஆண்டுகால விற்பனை உடன்பாடு அடுத்த ஆண்டு காலாவதியாகும்.
அதற்குப் பிறகும் சிங்கப்பூருக்கு தென் சுமத்ராவில் இருந்து தொடர்ந்து எரிவாயு அனுப்பப்படும் என திரு அரிஃபின் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
சிங்கப்பூர் தன்னுடைய தொழில்துறைகளுக்கும் மின்சக்தி உற்பத்திக்கும் எரிவாயுவையே அதிகம் சார்ந்து இருக்கிறது.
சிங்கப்பூரின் மின் தேவையில் 95 விழுக்காடு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது. இந்தோனீசியா இரண்டு வழித்தட குழாய்கள் மூலம் சிங்கப்பூருக்கு எரிவாயுவை விநியோகிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மேற்கு நட்டுனாவில் இருந்து சிங்கப்பூருக்கு வேறு ஓர் உடன்பாட்டின் கீழ் எரிவாயு வருகிறது.
சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்தோனீசிய அமைச்சர், தனிப்பட்ட பேட்டி ஒன்றையும் அளித்தார். தென் சுமத்ரா எரிவாயு வயலில் இருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்று பேட்டியில் அவர் கூறினார்.
தேவைக்கு அதிகமாக உற்பத்தி இருந்தால் கூடுதலாக வாயு அனுப்பப்படும் என்றார் அவர்.
இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட உடன்பாடு ஐந்து ஆண்டுகளாக சுருக்கப்பட்டது ஏன் என்று கேட்டபோது, நீண்டகால விநியோகத்திற்கு உத்தரவாதம் தர இயலாது என்று அவர் கூறினார்.
எரிவாயு வளம் குறைவதும் உள்நாட்டில் தேவை அதிகரிப்பதும் இதற்கான காரணம் என்றார் அவர்.
இதனிடையே, தென் சுமத்ரா எரிவாயு விநியோகம் பற்றி கருத்து கூறிய பகுப்பாய்வாளர்கள், அந்தத் தீவில் இருந்து வரக்கூடிய எரிவாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினர்.
சிங்கப்பூர் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதிகளை அதிகம் சார்ந்திருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

